(புதியவன்)
இலங்கையில் வீதி விபத்துக்களினால் ஏற்படும் மொத்த பொருளாதார சேதம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 3 முதல் 5 வீதமாகும் என மருத்துவ நிபுணர் ருவன் துஷார மதிவலகே தெரிவித்துள்ளார்.
இது முழு சமூக-பொருளாதார பேரழிவையும் சித்தரிக்கிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு தொலைக்காட்சி ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு சாலை விபத்துக்களால் 2280 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காயம் அடைந்தவர்கள், ஊனமுற்றவர்கள் இப்படி நான்கு மடங்குக்கு மேல் ஆகும்.
பெரும்பாலான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் பண்டிகைக் காலங்களில் விபத்துக்குள்ளானவர்களால் நிரம்பி வழிகின்றன.
இந்த ஆண்டு ஏப்ரல் இரண்டாம் திகதி வரை மட்டும் 566 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
குறைந்தது 2000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துகளில் பெரும்பாலானவை தடுக்கக்கூடியவை. அதுதான் சோகம்." என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நாடாக நாம் இதற்காக பெரும் தொகையை செலவிடுகிறோம்.
வீதி விபத்துக்களினால் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் மூன்று முதல் ஐந்து வீதம் வரை இழக்கப்படுவதாக உலக வைப்பகமும், உலக சுகாதார ஸ்தாபனமும் தெரிவித்துள்ளன.
இந்தப் பொருளாதாரப் பேரழிவு சுகாதாரத் துறைக்கு மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உலக வைப்பகம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கார் விபத்துகளால் ஏற்படும் ஆண்டு சேதத்தின் அளவை கணக்கிட்டால், சுமார் 730 பில்லியன் ரூபாய் ஆகும்.
ஆனால் இவ்வருடம் சுகாதாரத்துக்கான வருடாந்த ஒதுக்கீடு 410 பில்லியன் ரூபாவாகும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைச் செலவு, இறந்தவர்களினால் குடும்பத்திற்கு ஏற்பட்ட சமூகப் பொருளாதார சேதம், விபத்துக்களினால் வாகனங்களுக்கு ஏற்படும் சேதங்கள் உள்ளிட்ட மொத்தப் பெறுமதியாக இந்த விலை கணக்கிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பாரிய சமூக பொருளாதார அனர்த்தத்தை தவிர்ப்பதற்காக வாகன விபத்துக்களை தடுக்கும் பணியை பொலிஸ் அல்லது சுகாதார பணிமனையினால் மட்டும் செய்ய முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.