[ஆதவன்]
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்துக்கு தீர்வு காண்பதாக புதிய குழுவொன்று புறப்பட்டுள்ளது. உலகத் தமிழர் பேரவையும், சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினரும் இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளனர். இந்த இரு தரப்புகளின் இணைவும் பலத்த சந்தேகங்களையும் விவாதங்களையும் தோற்றுவித்திருக்கின்றது.
உலகத் தமிழர் பேரவையின் இந்த நகர்வுக்கு புலம்பெயர் தேசத்தில் உடனடியாகவே எதிர்வினையாற்றப்பட்டிருக்கின்றது. உலகத் தமிழர் பேரவை 2009ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பு ஒரு சிலருடன் மாத்திரமே இயங்கி வருவதாகவும், புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மை யானவரை அந்த அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்த வில்லை எனவும் 6 புலம்பெயர் அமைப்புகள் கூட்டாக அறிக்கையிட்டுள்ளன. அத்துடன் உலகத் தமிழர் பேரவையும், சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவும் இணைந்து வெளியிட்டுள்ள 'இமய மலைப் பிரகடனத்தையும்' அவை நிராகரித்துள்ளன. அந்தப் பிரகடனம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கவில்லை என்று 6 புலம்பெயர் அமைப்புகளும் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை தமிழர் தாயகத்தில் செயற்படும் அரசியல் தரப்புகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும்.
ஈ.பி.டி.பி.யும் மாத்திரமே இந்தச் செயற்பாட்டை வரவேற்றுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன இதனை நிராகரித்துள்ளன. தனிப்பட்ட தனி சிலரின் சுயலாப
முயற்சிக்காக இது முன்னெடுக்கப்படுவதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி குறிப்பிட்டுள்ளது. தமிழ்த்
தேசிய மக்கள் முன்னணியோ, ரணில் அரசாங்கத்துக்கு வெள்ளையடிப்புச் செய்யும் முயற்சி என்று இதைச் சாடியுள்ளது. பல எலிகள் சேர்ந்தால் புற்றெடுக்க முடியாதென்பார்கள். அதேபோன்று, இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சியிலும் பலரும் இப்போது ஈடுபட்டிருப்பதைக் காண முடிகின்றது.இது குட்டையை குழப்பும் முயற்சியே. பௌத்த-சிங்களப் பேரினவாதிகளுக்கும் அதுவே தேவையாக இருக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்த வரையில் அடுத்த தேர்தலுக்கான வியூகமாக இந்த முயற்சிக்கு முட்டுக்கொடுக்கின்றார். புலம்பெயர் தமிழர்களையும், ஈழத் தமிழர்களையும் ஒரே கோட்டில் ஏமாற்ற முற்படுகின்றார். அவரது இந்த முயற்சிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந் தலைவர் இரா. சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் ஆரவு கொடுக்கின்றனர். இதில் இரா.சம்பந்தனும், எம். ஏ.சுமந்திரனும் நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசமைப்பு உருவாகும் என்ற நம்பிக்கையில் ரணிலின் பின்னால் திரிந்தவர்கள். ரணிலின் எல்லா முயற்சிக்கும் கண்மூடி ஆதரவளித்தவர்கள். ஒட்டு மொத்த தமிழ் தலைவர்களும் பௌத்த-சிங்கள ஆட்சியாளர்கள் ஏமாற்றுவார்கள் என்று அவர்களை எச்சரித்தபோதும் அதையெல்லாம் புறக்கணித்து ரணிலுக்கும் தோள்கொடுத்தனர். இறுதியில் என்ன நடந்தது?
இப்போதும் உலகத் தமிழர் பேரவை என்ற 'கடிதத்தலைப்பு' அமைப்பினதும், சிங்கள மக்கள் மத்தியிலேயே அறியப்படாத சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினருடனும் இணைந்து தீர்வு முயற்சியில் தலையைப் போடுவதோ அல்லது அவர்களது இமயமலைப் பிரகடனத்தை ஏற்பதோ மீண்டும் தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் செயலே. புலம்பெயர் சமூகத்தின் ஆதரவு தேவைதான். தேரர்களின் ஆதரவும் தீர்வு முயற்சிக்கு அவசியம்தான். அதைச் செய்வதற்கான வழி நேர்வழியில் இருக்கவேண்டும். அதைவிட கோடிப்புறத்துக்குள் கூடிக்கதைத்துவிட்டு இதுதான் பிரகடனம் என்று சொல்லி அதைத் தமிழர்கள் தலையில் கட்டநினைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.