வளர்கின்றதா ரூபா
வளர்கின்றதா ரூபா

உலகில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நாணயப் பெறுமதியாக இலங்கை ரூபா அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 'நூலறுந்த பட்டம்போன்று' அங்கும் இங்குமாக அந்தரத்தில் அல்லாடித் திரிந்த ரூபாவின் பெறுமதி. சர்வதேச நாணய அலகுகளுக்கு நிகர்நின்று தளம் பலற்று வளர்ச்சியடைவதென்பது பாராட்டப்பட வேண்டியதே. மூன்று ஆண்டுகளுக்கு முன்னரும், அதற்கு அண்டிய அரகலய போராட்டக் காலப்பகுதியிலும் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கொண்டு சென்று, காகிதப் பைகளுக்குள் பொருள்களை வாங்கிவரும் சிம்பாப்வேயின் இழிநிலையை நோக்கி இலங்கை பயணிக்கின்றது என்று பலரும் எச்சரித்தனர். அத்தகைய நிலைக்கு அருகில் இலங்கை சென்றிருந்தாலும், இன்று அந்த ஆபத்திலிருந்து சற்றேனும் இந்தத் தீவு மீண்டு விட்டது என்பது வெளிப்படையானதே. சிம்பாப்வேயின் டொலர், பாகிஸ்தானின் ரூபா, மாலைதீவின் ரூபியா என்பவையும் இலங்கையின் ரூபா அதலபா தாளத்தில் வீழ்ந்த சமகாலத்தில் பலமிழந்த - மதிப்பிழந்த நாணயப் பெறுமதிகள்தான். கிணற்றில் வீசிய கல்போன்று அந்த நாணயப் பெறுமதிகள் இன்னமும் வீழ்ந்த இடத்திலேயே அசையா திருக்கையில், இலங்கை ஒப்பீட்டளவில் ஒருபடி முன்னேறியிருக்கின்றது என்பது உண்மையே.

ஆனால், இந்த மீட்சியும் வளர்ச்சியும் நிலையானதா என்ற கேள்வியும் எழவே செய்கின்றது. இலங்கை பொருளாதாரத்தில் நலிவடைந்த காலத்தில் ஆபத்பாந்தவனாகக் கரம்கொடுத்தது இந்தியா. நாணய நிதியமும் தன் கதவுகளைத் திறந்துவிட இலங்கை தன் டொலர் இருப்பைப் பேணியது. வாகன இறக்குமதித் தடைபோன்ற கொள்கைகளால் டொலரின் வெளிச் செல்கையையும் இலங்கை கண்காணித்தது கட்டுப்படுத்தியது. 'முன்னொரு நாள் விதை பின்னொரு நாள் மரமா வதைப் போன்று' இரு வருடங்களுக்கு முற்பட்ட திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளாலும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பாலும்தான் இன்று இலங்கை ரூபா பலம்பெற்றிருக்கின்றதே அன்றி. இவற்றுக்கு அப்பாற்பட்ட செயற்றிட்டங்களாக என்ன தான் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று கேட்டால், அதற்குரிய பதிலுக்கும் தொலை நோக்குச் செயற்றிட்டங்களுக்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை என்பது புரியும் - தெளியும்.

இலங்கைக்கு இன்று தேவைப்படுவது, டொலரின் இருப்பை வெளிவிடாமல் இறுகப்பற்றியிருக்கும் ‘கஞ்சத்தனம் அல்ல'. இந்தப்புரிதல் அடிப்படையானது. ஒருநாடு பொருளாதாரத்தில் பலப்பட வேண்டுமாயின், தன்நாணய அலகை உயர்த்திக்கொள்ள வேண்டுமாயின் 'டொலரின் ஈட்டுகையை' உறுதிப்படுத்த வேண்டும். இலங்கை செய்யத்தவறும் விடயமும் இதுவே. தேயிலை, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் இவை மூன்றும்தான் இலங்கைக்குள் டொலரின் வருகையைப் பிரதானமாகத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் காரணிகளாக அமைந்திருக்கின்றன. மீன்பிடி,விவசாயம், கால்நடை வளர்ப்பு, தெங்கு என இலங்கையின் பொருளாதார நிலைக்களன்களாகத் திகழ்கின்ற விடயங்களில் ஒருவித எதிர்காலமற்ற தன்மையையே இலங்கை கொண்டிருக்கின்றது. இந்தத் தொழிற்றுறைகளை வளப்படுத்தி டொலரின் ஈட்டுகைக்கான வாய்ப்புகளைப் பரவலாக்குகின்ற பட்சத்தில்தான் இலங்கையின் ரூபா 'எந்தப் பிடிமானமும் இன்றி' தலைநிமிரும். நாணய நிதியத்தின் கடன்கள் இலவசங்கள் அல்ல. நாணய நிதியமும் ஜப்பானும் இணைந்து மேற்கொள்ளும் கடன் மறுசீரமைப்புகள் தள்ளுபடிகளல்ல. இவை என்றோ வொருகாலத்தில் திரும்பிச்செலுத்தப்பட வேண்டியவை தான். அவற்றின் காலஅவகாசங்கள் குறுகுகின்றபோது இலங்கை ரூபாவின் பெறுமதி குறுகும். அவற்றின் காலஅவகாசங்கள் விரிகின்றபோது இலங்கை ரூபாவின் பெறுமதி விரியும்...!

(15. 04.2024-உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

256 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.