கத்திமேல் நடக்கிறதா இலங்கை...
கத்திமேல் நடக்கிறதா இலங்கை...

ஈரானின் அதிபரும், மிகச்சிறந்த போர்த்தந்திரியும் அமெரிக்க எதிர்ப்பு மனோநிலையில் ஊறித்திளைத்தவருமான இப்ராஹிம் ரைசி இன்னும் சில தினங்களில் இலங்கைக்கு வரவிருக்கின்றார். ஈரானிடமிருந்து இலங்கை பெற்றுக் கொண்ட 'உமாஓயா' அபிவிருத்தித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவிருக்கின்றார். அத்துடன், ஈரான் - இலங்கையிடையே கடந்த சில வருடங்களாக நடைமுறையில் இருந்துவரும் எரிசக்தித் திட்டங்கள் தொடர்பிலும் இந்தப் பயணத்தின்போது ரைசி கவனம் செலுத்துவார் என்றும் கருதப்படுகின்றது. நாணயங்களால் பிணைக்கப்பட்ட நிகழ்கால உலகில் ஒருநாடு இன்னொரு நாட்டுடன் தன் தொடர்பை வலுப்படுத்துவது தவிர்க்கப்பட முடியாததுதான். ஆனால், கடந்த மூன்று வாரங்களாக நிகழும் அதியுச்சப் போர் நெருக்கடிக்கு மத்தியில் ஈரானிய அதிபரின் இலங்கைப் பயணம், இலங்கைக்குத் தேவையற்ற இராஜதந்திர நெருக்குவாரங்களை ஏற்படுத்தவல்லது. ஏனெனில் இங்கு இலங்கை, அமெரிக்காவையும் இஸ்ரேலையும் மட்டுமல் லாமல் 'நேட்டோ' கூட்டணிகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும்கூட நேரடியாகப் பகைக்கத் தலைப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் பெருவிரிசல் ஏற்பட்டுள்ளது. அணுவாயுதங்களுக்குத் தேவையான யுரேனியத்தைச் சட்டவிரோதமாகச் செறிவூட்டுகின்றது என்று தெரிவித்த அமெரிக்கா, ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது திணித்து வைத்திருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், ஈரானிய இராணுவத் தலைவர்களை இலக்குவைத்துக் கொலை செய்யுமளவுக்கு இந்த விடயத்தில் அமெரிக்கா அதி தீவிரமாக இயங்கி வருகின்றது. ஈரானின் போர்த்தந்திரி என்று அறியப்படும் சுலைமானி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டமைகூட இதே பின்புலத்தில் தான். அமெரிக்கப் பதற்றங்கள் ஒருபுறம் இருக்கையில், தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல்கள் ஓர் உலகப்போர்முனையாக மாறும் அளவுக்குத் தீவிரம் பெற்றிருக்கின்றன. இரண்டு நாடுகளும் நேருக்குநேராக வான் தாக்குதல்களில் பரஸ்பரம் ஈடுபட்டு வருகின்றன. ஆக, ஒரு போர்க்கூட்டணியின் அவசியம் தற்போது வலுவாகவே உணரப்பட்டிருக்கின்றது. இதனால் எந்தநாடுகள் எல்லாம் ஈரானை ஆதரிக்கின்றனவோ அணுகுகின்றனவோ-தூதரக உறவுகளை ஈரானுடன் வலுப்படுத்துகின்றனவோ அவற்றை 'தீட்டு நாடுகளாக' கருதி தன் நட்பு வட்டாரத்துக்குள் இருந்து தொலைதூரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தள்ளியே வைக்கும். உலக அரசியலில் அண்மைய நகர்வுகள் பலவும் அதையே கட்டியம் செய்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் ஈரானிய அதிபர் இலங்கைக்கு வரவிருக்கின்றமை சாதாரணமாகக் கடந்துபோகக்கூடிய நாளாந்தச் செய்தியல்ல. மிகப்பெரிய ஆபத்தை இந்தப் பயணம் இலங்கைக்கு உண்டுபண்ணக் கூடியது. விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர், இலங்கையில் பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனாவின் கடல்சார் மற்றும் புவியியல் தலையீடுகள் நாளுக்குநாள் தீவிரமாகிக்கொண்டேவருகின்றன. இந்தி யாவின் பக்கமாகச் சாய்வதா? சீனாவின் பக்கமாகச் சாய்வதா? என்ற தீர்மானத்தில் ‘மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலு மாக' பரிதவிக்கின்றது இலங்கை. இவ்வாறிருக்கையில், ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளும் இந்தத் தீவில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தால் இலங்கையின் எதிர் காலம் மீண்டெழமுடியாத இருண்ட பக்கங்களால் சூழப் படவே செய்யும்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் என்பது தூதரக - இராஜதந்திர விவகாரம் அல்ல. இது முழுக்கமுழுக்க ஆயுதங்களை மையப்படுத்தியது. சீனா - இந்தியா விவகாரம் போன்று ஈரான் அமெரிக்கா விவகாரத்தை இலங்கை அணுகமுடியாது, அணுகவும்கூடாது. அமெரிக்கா என்னும் பிணம்தின்னிக் கழுகு இலங்கையை நோக்கி தன் கடைக்கண்ணைத் திருப்பினால், இஸ்ரேலிடம் இருந்து கிடைக்கும் குறைவற்ற தொழில் வாய்ப்புகளை இஸ்ரேல் வேறுநாடுகளுக்கு வழங்க ஆரம்பித்தால் அந்தப் பின்னடைவில் இருந்து மீண்டுவரும் திராணியும் பொருளாதாரப் பலமும் இலங்கையிடம் இப்போதைக்குக் கொஞ்சமும் இல்லை என்பது வெளிப்படை! அதற்காக ஈரானை முற்றாகப் பகைத்துவிடவும் முடியாது. இலங்கை தன் இராஜதந்திரப் பலம் அனைத்தையும் ஒன்றுதிரட்டி அணுக வேண்டிய விடயம் இது. வழக்கமான விஷப்பரீட்சைகளுக்கு இதில் இடமில்லை...!

(20. 04.2024-உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

#editorial

265 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.