தமிழர் முன்னுள்ள இரு தெரிவுகள்!!!
தமிழர் முன்னுள்ள இரு தெரிவுகள்!!!

'தமிழர் தரப்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது. அத்தகைய முடிவை தமிழ்க் கட்சிகள் எடுக்கமாட்டாது' என இராஜாங்க அமைச்சர் காதர்மஸ் தான் வவுனியாவில் வைத்துக் கூறியுள்ளார். இதையொத்த கருத்தையே அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஈ.பி.டி.பி.யும் கூறியிருக்கின்றது. அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ரணிலை ஆதரிப்பதற்கு வெளிப்படையாகத் தீர்மானித்து அறிவித்தும் விட்டார். அதனால் தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கின்றார். இதேபோல தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கின்ற நிலைப்பாட்டை தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரனும் அவரது அணியினரும் எடுத்திருக்கின்றனர். அவர்களை ஆதரிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனும் கருத்துரைத்திருக்கின்றார். இலங்கை அரசாங்கத்தின் ஆளும் தரப்பினரும், தமிழ்த்தேசிய அரசியல் பரப்பிலே சுமந்திரன் அணியினரும் ஒரே நிலைப்பாட்டையே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எடுத்திருக்கின்றனர்.

சுமந்திரன் அணியினர் மீது தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்க அரசியலை முன்னெடுப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. குறிப்பாக நடைபெற்று முடிந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலின்போது கூட இந்த விவகாரம் எதிரொலித்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவானவராகவும், சுமந்திரன் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவராகவும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். அதைச் சரியென நிரூபிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாடு அமைந்திருக்கின்றது.

தென்னிலங்கைத் தலைவர்களை ஆதரித்து தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக சம்பந்தன் - சுமந்திரன் இருவரும் கண்ணை மூடிக்கொண்டு நல்லாட்சிக்காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடம் சரணடைந்திருந்தனர். புதிய அரசமைப்பு வரும் வரும் என்று சொல்லியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றார் ரணில் விக்கிரமசிங்க. அவரது அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை, வரவு-செலவுத் திட்ட வாக்களிப்பு ஆகியவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சம்பந்தன் - சுமந்திரன் இருவரையும் தவிர்த்து ஏனையோர் எதிர்த்தபோது 10 நிபந்தனைகளை விதித்து அவற்றை ரணில் ஏற்றுக்கொள்வதாக ஒப்பந்தத்தைப்பெற்ற இந்த இருவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை வைத்து, நல்லாட்சி அரசாங்கத்தைக் காப்பாற்ற உதவினர். ஆனால் அந்த நிபந்தனைகளில் ஒன்றைக்கூட ரணில் நிறைவேற்றவில்லை. ஆகக் குறைந்தது கல்முனை தமிழ் பிரதேச செயலகத்துக்கு கணக்காளரைக்கூட நியமிக்கவில்லை. இத்தகைய பட்டறிவைப் பெற்ற பின்னரும் கூட, தென்னிலங்கைத் தலைவர்களுக்கு தங்கள் இரு கரங்களையும் இவர்கள் உயர்த்துவதை தமிழ்த்தேசிய விரோத நடவடிக்கை என்று அடையாளப்படுத்தாமல் வேறு எப்படிச் சொல்லமுடியும்?

நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுவேட்பாளரை நிறுத்துவதை இவர்கள் கடுமையாக எதிர்ப்பதன் பின்னணியில் தமிழ்த் தேசிய அரசியல் இருக்காது என்பது நிரூபணமாகின்றது. வெறுமனே, இனப்படுகொலையாளி ராஜபக்சவுக்கு ஆதரவான நிலைப்பாடு இது என்று பொத்தம் பொதுவில் சொல்லிவிட்டு அவர்கள் கடந்து செல்லவும் முடியாது. ஏனெனில், ராஜபக்சவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதேபோல தென்னிலங்கையில் இப்போதைய நிலைமையில் ஜனாதிபதி போட்டிக்களத்தில் நிற்கும் ரணிலோ, சஜித்தோ, அநுரவோ ராஜபக்சக்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் இல்லை. அவர்களும் பௌத்த - சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் கருவிகளே. எனவே தமிழ் மக்கள் தீர்க்கமாக சிந்தித்து தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிக்கவேண்டும். அல்லது தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். இவையிரண்டுமே இப்போது தமிழர்கள் முன்னாலுள்ள தெரிவுகள்.

(18. 04.2024-உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

253 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.