ஆசிரியர்_தலையங்கம்...
ஆசிரியர்_தலையங்கம்...

 

பொதுவேட்பாளரால் வந்த பிளவு

இந்த ஆண்டு அரச தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. தெற்கில் அரசியல் கட்சிகள் அரச தலைவர் தேர்தலுக்கான பரப்புரைகளை ஆரம்பித்திருக்கும் நிலையில், தமிழர்கள் மத்தியில் பொது வேட்பாளரைக் களமிறக்குவது பற்றிய கருத்தாடல்கள் ஆரம்பித்துள்ளன.கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு பெரும்பான்மையினத் தலைவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வாய்ச்சொல்லுடன் கரைந்துவிட்ட நிலையில் - தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட பின்னணியில் - அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாகப் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கவேண்டும் என்ற கருத்து வலுவாக எழுந்திருக்கின்றது. சிங்களத் தலைவர்களின் வாக்குறுதிகளை இனியும் நம்பத் தயாரில்லை என்ற தமிழ் மக்களின் மனக்கிடக்கையை உறைக்கக்கூறும் வாய்ப்பாக இந்தப் பொது வேட்பாளர் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதும் - தமிழ் மக்கள் அனைவரையும் ஒரு நிரல்படுத்துவதும் இலகுவானதாக இருக்கப் போவதில்லை. கட்சி மோதல்கள் - உட்கட்சி மோதல்கள் என்று சிதறுண்டு கிடக்கும் தமிழ் அரசியல் தளத்தில் இந்த முயற்சி பெரும் பிரயத்தனம் மிக்கதாகவே இருக்கும். இந்த முயற்சி செயலுருப் பெற வேண்டுமானால் - வெற்றியளிக்க வேண்டுமானால் தமிழ் அரசியல் தளத்தில் ஏற்பட வண்டிய மாற்றங்களே மிக முக்கியமானவை.

'தமிழ்ப் பொதுவேட்பாளர்' என்ற கருத்து வெளியானது முதலே தமிழ் அரசியல் கட்சிகளிடையே கருத்து மோதல்கள் ஆரம்பித்திருக்கின்றன. பொதுவெளியில் ஒருவரை ஒருவர் விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றனர். பொதுவேட்பாளர் என்ற கருத்தோட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஊடகங்களில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன - சேறுபூசல்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் அரசியல் தளத்தில் இவ்வாறான அரசியல் பண்பே கடந்த காலங்களிலும் வெளிப்பட்டிருந்தது. ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி பொறுப்புகளில் இருந்து தப்பிக்கொள்ளும் - அரசியல் ஆதாயம் தேட முயலும் தமிழ்க் கட்சிகளின் அரசியல் பண்பே, தமிழ் மக்களை அவர்களிடம் இருந்து தூரக் கொண்டு சென்றிருக்கின்றது. தற்போதும் தமிழ் அரசியல் கட்சிகள் அந்தப் போக்கைக் கைக் கொள்வது மக்களை இன்னமும் அவர்களிடத்தில் இருந்து தூரமாக்குமே தவிர, நேர்மறை விளைவுகள் எதையும் ஏற்படுத்தப்போவதில்லை.

அரசியல் ஆதாயங்களுக்கு அப்பால், தமிழ் மக்களின் எதிர்கால நலன்கருதி ‘தமிழ்ப் பொது வேட்பாளர்' என்னும் திட்டத்தைச்செயற்படுத்த விரும்பின் தமிழ்க் கட்சிகள் முதலில் தங்களிடையே ஓர் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயலவேண்டும். அவர்கள் ஒருமித்த புள்ளிக்கு வந்த பின்னர் மக்களைச் சந்திக்க வேண்டும். அதைவிடுத்து ஒலிவாங்கிகளின் முன்பாகவும், அறிக்கைகள் ஊடாகவும் ஒருவர் மீது ஒருவர் சாடி -சேறு பூசிக்கொள்வதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. மக்களும் அவர்களின் பின்னால் திரளப்போவதில்லை. இந்த நிதர்சனத்தை தமிழ் அரசியல் கட்சிகள் உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அவா.

244 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.