தந்தை செல்வாவின் நினைவுநாள் கடந்த சில தினங்களாக வடக்கு - கிழக்கில் பரவலாகக் கடைப்பிடிக் கப்பட்டிருக்கின்றது. இந்த நிகழ்வை தமிழரசுக் கட்சியினர், தந்தை செல்வா நினைவுக் குழுவினர் ஒழுங்கமைத்திருந்தனர். தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியை இன்று நீதி மன்றப்படியேற்றி திரிசங்கு நிலையில் நிறுத்திவிட்டு அவரின் நினைவுநாளை எந்தக் கூச்சமுமின்றி அவரது கட்சியினரால் எவ்வாறு நினைவுகூர முடிந்திருக்கின்றது? தந்தை செல்வாவின் வழியில் பயணிப்பதாகச் சொல்லிக்கொண்டு அவரது நடைமுறைகளைப்பற்றி வகுப்பெடுத்துக்கொண்டு நினைவு நாளை இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் கடைப்பிடித்திருக்கின்றனர். தந்தை செல்வாவை உளப்பூர்வமாக அந்தக் கட்சியினர் யாராவது நினைவு கூர்ந்திருந்தால், கட்சியின் இன்றைய நிலையை எண்ணித் துடித்திருப்பர். ஆனால் அப்படி எவரும் துடிக்கவில்லை. எனவே கட்சியினர் அனைவரும் வெறும் சம்பிரதாயத்துக்காகவே தந்தை செல்வாவின் நினைவுநாளைக் கடைப்பிடித்தனர் என்று எண்ண வேண்டியிருக்கின்றது.
தந்தை செல்வாவின் நினைவுநாள் நிகழ்வு தமிழரசுக் கட்சியின் திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருகோணமலைக்கும் அந்தக் கட்சிக்கும் நீண்ட தொடர்பிருக்கின்றது. இப்போதும் கூட கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று தலைவர் தெரிவு நடைபெற்றதும் திருகோணமலை மண்ணில்தான். அந்த மண்ணில்தான் கட்சியின் தலைவர் தெரிவுக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த நினைவுநாளில் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் (தேர்தல்கள் ஆணைக்குழுவின்பதிவின்படி)மாவை. சோ. சேனாதிராசா, திருகோணமலையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அந்தத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இங்கு உரையாற்றிய சுமந்திரன், 'தந்தை செல்வா, அப்போதைய பிரதமர்களான பண்டா, டட்லியுடன் ஒப்பந்தங்களைச் செய்தபோது சுயாட்சியை அது உள்ளடக்கியிருக்கவில்லை. இப்போது அவ்வாறு ஒப்பந்தத்தை செய்தால் சொந்தக் கட்சியினரே துரோகிகள் என்று வசை பாடுவார்கள்' எனச் சுட்டிக்காட்டியிருந்தார். அவர் சொல்வது உண்மைதான். நல்லாட்சிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரால் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், கட்சியின் தலைவராக இருந்த சம்பந்தனும் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சியில் பங்கேற்றனர். இவர்களால் கூட்டாட்சி என் சொல்லப்படுகின்ற அரசமைப்பை உருவாக்க முடியவில்லை. அதேபோல வடக்கு- கிழக்கு இணைப்பை வலியுறுத்தும் புதிய அரசமைப்பை உருவாக்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பௌத்தத்துக்கு முதலிடம் என்பதை நீக்கி மதச்சார்பற்ற நாடாகக் கொண்டு வரமுடியவில்லை. இவற்றையெல்லாம் விட்டுக் கொடுத்துவிட்டு, ஏக்கிய ராஜ்ஜிய / ஒருமித்த நாடு என்ற ஒன்றைக்கொண்டு வந்து அதுதான் சமஷ்டி என்று சொன்னார்கள். சமஷ்டி என்று இல்லையே ஒழிய சமஷ்டியின் குணாதிசயங்கள் அனைத்தும் உண்டு என்றார்கள். இதைத்தான் அவரது கட்சியினரும் மக்களும் எதிர்த்தார்கள். துரோகி என்றார்கள்.
தந்தை செல்வநாயகம் தங்களுக்கான விட்டுக் கொடுப்பற்ற ஒரு தலைவர் என்பதை தமிழ் மக்கள் முழுமையாக நம்பினார்கள். தனது சுகத்தை துறந்து தங்களின் விடிவுக்காகவே அவர் செயற்படுவார் என்பதில் தமிழ் மக்களுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அவர் சுயாட்சியை விட்டுக்கொடுத்துவிட்டு தங்களை சிங்களவர்களிடம் அடகு வைத்துவிடுவார் என்று தமிழ் மக்களுக்கு எந்தவொரு கணத்திலும் சிந்தனை ஏற்பட்டதில்லை. நம்பிக்கை என்பது இயல்பாகவே அவர்களது செயற்பாடுகளின் அடிப்படையில் மக்களிடம் கட்டியெழுப்பப்படுவது. ஆனால் சம்பந்தன் மீதோ,சுமந்திரன் மீதோ தமிழ் மக்களுக்கு அப்படியொரு நம்பிக்கை ஏற்படவில்லை. ஏற்படப்போவதுமில்லை. இப்போது வரையில் அதுதான் நிலைமை.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.