முஸ்லிம்களுக்கு எதிராக ராஜபக்சக்கள் முன்னெடுத்த அரசியல் பரப்புரைகளின் உச்சக்கட்டமாகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா? என்று நாடாளுமன்றத்தில் வைத்து வினவியிருக்கின்றார் ஜே.வி.பி.யின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க. அத்துடன், பாதுகாப்புத் தரப்பினரதும், தாக்குதல்தாரிகளினதும் பொது இணக்கப்பாட்டுடன் தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா? சனல்-4 ஊடகத்தின் ஆவணப்படம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக உள்நாட்டில் வெளியிடப்படும் கருத்துகளை அடிப்படையாக வைத்து இன்னமும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமை ஏன்? என்றும் அவர் கேள்விக்கணைகளை அடுக்கியிருக்கின்றார்.
இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் அதி காரத்தைக் கைப்பற்றுவதற்காக எப்போதும் இனவாதம், சிறுபான்மையினருக்கு எதிரான கருத்தி யல் என்பவற்றையே பெரும்பான்மை மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்யும் ஆயுதங்களாகக் கொண்டிருக்கின்றன. நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்தபோது, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தின் ஊடாக தெற்கு அரசியல் கட்சிகள் வாக்கு வேட்டை நடத்தின. போர் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டின் மீட்பர்களாகத் தங்களை அடையாளப்படுத்தி கோலோச்சிய ராஜபக்சக்கள் மீதான அபிமானம் குறைந்து, அதிகாரம் பறிபோயிருந்த சந்தர்ப்பத்திலேயே நாட்டை -உலகை -உலுக்கிய உயிர்த்தஞாயிறு கொடூரத் தாக்குதல்கள் இலங்கையில் அரங்கேறியிருந்தன.
ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்காகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டன என்பதை சில சாட்சியாளர்களின் கருத்துகளுடன் வெளிப்படுத்தியிருந்தது 'சனல்-4. ராஜபக்சக்களுக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என்போரின் ஒத்துழைப்புடன் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று சனல் - 4 ஊடகத்தில் கருத்துத் தெரிவித்த அந்தச் சாட்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் நாட்டின் அதியுயர் பதவிகளில் இருப்பவர்களின் மறைகரங்கள் உள்ளன என்று பல தரப்புகளும்- குறிப்பாக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் தொடர்ச்சியாக கூறி வந்தனர். எனினும், இந்தக் கருத்துகளையெல்லாம் ஒரு புள்ளியில் இணைத்து கனதியான விசாரணையொன்று, தாக்குதல் நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதும் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.
பதவியைக் கைப்பற்றுவதற்காகவே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் என்ற சதியில் நாட்டு மக்களின் உயிர்கள் பலியெடுக்கப்பட்டிருக்குமானால் அதைப் போன்றதொரு மோசமான செயல் வேறொன்றும் இல்லை. அரசாங்கம் மீண்டும் விசாரணை, ஆணைக்குழு என்று சாக்குக்போக்குக் கூறிச் சமாளிக்காது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயர்மட்டத்தில் உள்ள பலர் தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்று சொல்லப்படும் நிலையில், விசாரணையில் கண்டறியப்பட்ட தகவல்கள் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால், ராஜபக்சக்களின் நிழலில் பதவிச்சுகம் கண்டுகொண்டிருக்கும் அரச தலைவர் ரணிலோ அவரது அரசாங்கமோ இவற்றையெல்லாம் செய்யப்போவதில்லை என்பதே யதார்த்தம்...!
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.