ஏட்டுச்சுரைக்காயால் ஏது பலன்
ஏட்டுச்சுரைக்காயால் ஏது பலன்

இலங்கையின் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

'சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், சித்திர வதைகள், மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைகள், அரசாங்கத்தின் தண்டனை, கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சிறை நிலைமைகள் மற்றும் தன்னிச்சையான கைது அல்லது காவலில் வைத்தல் போன்ற குறிப்பிடத்தக்க மனிதஉரிமை மீறல்கள் பதிவாகியுள்ளன. 2023ஆம் ஆண்டில் அர சாங்கம் அல்லது அதன் முகவர்கள் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் உட்பட தன்னிச்சையான கொலை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனப் பல்வேறு செய்திகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பொலிஸ் காவலில் பல உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக சர்வதேச சமூகத்தால் பல அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளரது எழுத்துமூல அறிக்கை, வாய்மொழிமூல அறிக்கை என்று இதே போன்று பல அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக் கின்றன. இந்த அறிக்கைகள் சர்வதேச சமூகத்தால் வெளியிடப்படுவதன் ஊடாக இலங்கை அரசாங்கம் ஏதாவது நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக் கின்றதா? என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில்.

இலங்கையில் உள்நாட்டுப்போருடன் மனித உரிமை மீறல்களோ அல்லது மனிதாபிமானச் சட்ட மீறல்களோ முடிவுக்கு வரவில்லை. இன்னமும் அவை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை பல்வேறு வடிவங்களில் சிங்கள- பௌத்த சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் திணைக்களங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கு எந்தவொரு கடிவாளமும் போடப்பட வில்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும், சர்வதேச மன்னிப்புச்சபையும் இலங்கையின் மீறல்களைக் கண்டித்துக் கொண்டிருந்தாலும் அதனால் எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை. அறிக்கைகளால் இலங்கை அரசாங்கத்தை கட்டுப்படுத்தமுடியாது எனத் தெரிந்த பின்னரும் 'வெறும் காகித அறிக்கைகளை' மாத்திரம் வெளியிடுவதன் நோக்கம் என்ன? ஏட்டுச் சுரைக்காய் ஒரு போதும் கறிக்கு உதவப்போவதில்லை. இலங்கை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு நியாயத்தைப்பெற்றுக்கொடுக்கும் இதயசுத்தியிருந்தால் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும். ஆனால் அந்த நாடுகள் அல்லது அமைப்புகள் தங்கள் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட தரப்புகளை கருவிகளாகப் பயன்படுத்தி தங்கள் விடயங்களை நிறைவேற்றிக்கொள்கின்றனர். இலங்கை விவகாரத்தை இன்று வரையில் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா வைத்திருப்பதே அதற்காகத் தான் என்பது வெளிப்படை.

இவர்கள் வெளியிடும் அறிக்கைகளால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அத்தோடு இத்தகைய விடயங்களும் நடக்காமல் விடப்போவதில்லை. எதிர்காலத்திலாவது வெறும் அறிக்கைகளை விடுத்து ஏமாற்றுவதைவிட தங்கள் நலன்களைத்தாண்டி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். காத்திரமான நடவடிக்கைகள் மூலமே இலங்கை அரசாங்கத்தின் தறிகெட்ட போக்கைக் கட்டுப்படுத்த முடியும்.

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

285 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.