(புதியவன்)
சவூதி அரேபிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானினால் இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான அனுசரணை வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.
சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் முஸ்லிம்கள் இந்த வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்ள இளவரசரால் அனுசரணை வழங்கப்படவுள்ளதாக குறித்த சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையத்தள இணைப்பொன்றைக் குறிப்பிட்டு இந்த வாய்ப்பினை பெற விரும்புபவர்கள் அதன் ஊடாக தங்களை பதிவுசெய்யுமாறும் குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் உயர் அதிகாரியொருவரை தொடர்புகொண்டு வினவிய போது, "சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இத்தகவல் முற்றிலும் பொய்யானதாகும்" என அவர் கூறினார்.
அத்துடன், இளவரசர் முஹம்மத் பின் சல்மானினால் இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக எந்தவித விண்ணப்பங்களும் இதுவரை கோரப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
"குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தள முகவரி சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியும் அல்ல" என தூதரகத்தின் உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பொதுமக்களின் விவரங்களை சட்டவிரோதமாக சேகரிக்கும் நோக்கில் இது போன்று தொடர்ச்சியாக பரப்பப்படும் போலித் தகவல்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியதும் குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.