இன்று மே இரண்டாம் நாள்! விடிந்தால் உலக ஊடக சுதந்திரநாள், நேற்றையநாளோ தொழிலாளர்களின் சுதந்திரத்தை வலியுறுத்தும் நாள், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட இன்றைய நாள் வரலாற்றின் கறுப்புநாள் என்றால் அதில் மறுகருத்துக்கு இடமிருக்காது. 18 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்தான் உலகின் மிகப்பெரிய ஊடகப் படுகொலை இருளின் துணையோடு நிகழ்த்தப்பட்டது.
தமிழ்த் தேசியப்பாதையில் தடம்மாறாது பயணிக்கும் உதயன் ஊடகப் பணிமனைக்குள் 2006ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் புகுந்த ஆயுததாரிகள் நடத்திய கொலை வெறியாட்டத்தில் இரு உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. உதயன் விற்பனை முகாமையாளரான பஸ்ரியன் ஜோர்ஜ் சகாயதாசன் மற்றும் விநியோக ஊழியரான ரஞ்சித்குமார் ராஜரட்ணம் ஆகிய இருவரும் கொலைகாரத் துப்பாக்கிகளின் பசிக்கு இரையாகினர். கணினிகள், அச்சியந்திரம் என்று எதுவுமே ஆயுததாரிகளின் கொலைவேட்டையில் தப்பவில்லை. அலுவலகம் முழுதையும் துப்பாக்கிரவைகளால் சல்லடையிட்ட பின்னரே ஆயுதக்குழு அகன்றது.
எத்தனையோ ஊடகங்கள் அப்போதும் இருக்கையில் ஏன் உதயன் மட்டும் இலக்குவைக்கப்பட்டது? ஏனென்றால் உதயன் மட்டுமே தமிழ் மக்களின் உரிமைக்குரலாக, தளராத துணிவோடு உலகெங்கும் உண்மையை உரத்துச் சொன்ன ஊடகம். பேசாப்பொருளை துணிந்து பேசிய பத்திரிகை. அரசாங்கத்தினதும், அதன்அடிவருடிகளினதும் அக்கிரமங்களையும், குருதி குடிக்கும் போரால் மக்கள் சந்திக்கும் பேரவலத்தையும் உதயன் வெளிப்படுத்தி நின்றதால், நிலைகுலைந்துபோன அதிகாரவர்க்கம், உதய னுக்கு ஒட்டுமொத்தமாக சமாதிகட்ட முடிவெடுத்தது. அதிகாரத்தின் வேட்டைநாய்கள் உதயன் மீது பாய்ந்தன. இரு உயிர்களைக் குதறிக்கொன்றுவிட்டு தப்பியோடியும் விட்டன. இந்தக் கொலைவெறித்தாக்குதல் நிகழ்ந்து 18 வருடங்கள் கழிந்துள்ளபோதும், காவுகொள்ளப்பட்ட உயிர்களுக்கு நீதியென்பது இன்னமும் எட்டாக்கனியாக இருப்பதுதான் ஆகப்பெரும் அபத்தம்.
இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். 'உதயன் மீது எமது கட்சிதான் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலை நடத்தியவர்களில் சிலர் இப்போது வெளிநாட்டில் இருக்கின்றனர். ஒரு சிலர் இலங்கையில் உள்ளனர்' என்று ஜனநாயகப் பாதைக்கு திரும்பிவிட்டதாகக் கூறிக்கொண்ட ஒரு கட்சி மீது, அதே கட்சியில் பல வருடங்களாக இயங்கிய ஒருவர் இரண்டுமுறை பகிரங்க ஊடகச் சந்திப்புகளில் உண்மையைப் போட்டுடைத்திருந்தார். அந்த நபரை விசாரணை செய்தாலேயே, உதயனில் நிகழ்த்தப் பட்ட கொலையின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கலாம். ஆனால், அதைச் செய்ய அரசாங்கம் விரும்பவில்லை. ஏதேனும் ஆர்ப்பாட்டம், பேரணி என்றால் மட்டும் அதில் பங்கு பெறுபவர்களை வளைத்து, வளைத்து படம் எடுத்து, பின்னர் அவர்களின் வீடுகளுக்குச் சென்று மிரட்டும் பொலிஸாரோ, புலனாய்வுப் பிரிவினரோ அந்தப் பகிரங்கக் கொலை ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் அலட்டிக் கொள்ளவேயில்லை. அதன் மூலம் உதயனில் நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில் அரசாங்கத் துக்கும் பங்குண்டு என்பது வெட்டவெளிச்சமாகியது. ஆனாலும், அதிகாரம் ஆசைப்பட்டதுபோல உதயனின் குரல்வளையை அவ்வளவு லேசாக நசுக்கிவிட முடிய வில்லை. முன்னரைக் காட்டிலும் இன்னும் வீரியத்தோடுதான் உதயன் ஊடகப்பணியாற்றியதே தவிர அஞ்சி, நடுங்கி, அடிபணிந்துவிடவில்லை. இந்த ஓர்மமும், அர்ப்பணிப்பும், மக்களின் ஆதரவுமே உதயனின் துணிச்சலான இருப்புக்கு மூலகாரணம். அதன்பின்னரும் ஏனைய ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் இலங்கையில் வன்முறைகள் தொடரவே செய்கின்றன. 'ஊடகங்களைக் கட்டுப்படுத்த நினைப்பவன் உண்மையில் மக்களையே கட்டுப்படுத்த நினைக்கிறான்' என்று நோயம் சோம்ஸ்கி சொன்னது இன்று நிஜமாகிக் கொண்டிருக்கிறது.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.