இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஆதவன்.
கூட்டுக் கடற்றொழில் நடவடிக்கைக்குழு மூலம் இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட தமிழகத்தின் ஆறு மீனவர்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களின் படகுகளும் பறிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சருக்கு தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் உள்ளதாவது:-
'தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மீன்பிடிக்கச்சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட் டுள்ளனர். அண்மைக்காலமாக இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீன்வர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து இடம்பெறுவது கவலையளிப்பதாக உள்ளது. இத்தகைய போக்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடியாகக் கவனம்
செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட் டுள்ளது.
தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு, மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளன. இந்தக் கைதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவச் சமூகங்களின் கலாசார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத் தும் வகையில் உள்ளன.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும் -என்றுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.