டெஸ்ட் அரங்கில் வோர்னருக்கு இறுதி வாய்ப்பு.
டெஸ்ட் அரங்கில் வோர்னருக்கு இறுதி வாய்ப்பு.

கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் அண்மைக்காலமாக பிரகாசிக்கத் தவறியதன் காரணமாக பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள அவுஸ்திரேலிய ஆரம்ப வீரர் டேவிட் வோர்னருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்கு வழங்கப்பட்டுள்ள கடைசி வாய்ப்பாகவும் கருதப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் ஜூன் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் டேவிட் வோர்னர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய தெரிவாளர்களால் பெரும்பாலும் வோர்னர் ஓரங்கட்டுப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவரது அனுபவம் மற்றும் கடந்த காலங்களில் அவர் வெளிப்படுத்திய ஆற்றல்கள் என்பன அவருக்கு கடைசி வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் ஓர் இரட்டைச் சதம் உட்பட 511 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற 36 வயதான வோர்னர், இந்த வருடம் 3 டெஸ்ட் போட்டிகளில் 36 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார். இந் நிலையில் அணியில் தனது இடத்தை தக்கவைப்பதில் வோர்னர் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்.

இந்தியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டேவிட் வோர்னர் விளையாடுவார் என அவுஸ்திரேலிய தெரிவுக் குழுத் தலைவர் ஜோர்ஜ் பெய்லி தெரிவித்தார். 

ஆனால், ஏஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் வோர்னர் விளையாடுவாரா என்பதற்கான உத்தரவாதத்தை அவர் வழங்கவில்லை. முதலாவது ஏஷஸ் டெஸ்ட் போட்டி எஸ்பெஸ்டனில் ஜூன் மாதம் மத்தியில் நடைபெறவுள்ளது.

டேவிட் வோர்னர் அணியில் சேர்க்கப்படாவிட்டால் உஸ்மான் கவாஜாவுடன் மார்க்கஸ் ஹெரிஸ் அல்லது மெத்யூ ரென்ஷோ ஆரம்ப வீரராக விளையாடுவார்.

டேவிட் வோர்னர் 103 டெஸ்ட் போட்டிகளில் 25 சதங்கள், 34 அரைச் சதங்கள் உட்பட மொத்தம் 8158 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் 2019 நவம்பரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வொர்னர் குவித்த ஆட்டம் இழக்காத 335 ஓட்டங்களே இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கையாகும்.

இதேவேளை, இந்தியாவுக்கு எதிராக அண்மையில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் விளையாடிய பீட்டர் ஹாண்ஸ்கொம்புக்கு இடம் வழங்கப்படவில்லை. அவர் தற்போது இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

மிச்செல் மார்ஷ் 4 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் 2019 செப்டெம்பர் மத்தியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே மார்ஷ் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டி ஆகும்.

தாயாரின் மறைவு காரணமாக இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் விளையாடாமல் நாடு திரும்பியிருந்த அணித் தலைவர் பெட் கமின்ஸ் மீண்டும் அணியில் இணைந்துகொண்டுள்ளார்.

இந்தியாவுக்கான கிரிக்கெட் விஜயத்தில் இடம்பெற்ற சுழல்பந்துவீச்சாளர்களான ஏஷ்டன் அகார், மிச்செல் ஸ்வெப்சன், மெட் கியூனேமான் ஆகியோர் இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்தில் இணைக்கப்படவில்லை. 

அவர்களுக்கு பதிலாக டொட் மேர்ஃபி குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அவர் நேதன் லயனின் சுழல்பந்து வீச்சு ஜோடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

380 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.