(புதியவன்)
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
அகமதாபத்தில் இன்று(17) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 17.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
குஜராத் அணி சார்பில் ரஹித் கான் 31 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள, ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
டெல்லி அணி சார்பில் பந்துவீச்சில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கலீல் அஹமட் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர்.
90 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
டெல்லி அணி சார்பில் ஜேக் ஃப்ரேசர் 20 ஓட்டங்களையும், ஹாய் ஹோப் 19 ஓட்டங்களையும் மற்றும் ரிஷாப் பான்ட் 16 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
குஜராத் அணி சார்பில் பந்துவீச்சில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும் ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ரஹித் கான் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக டெல்லி அணித் தலைவர் ரிஷப் பாண்ட் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக டெல்லி கேபிடல்ஸ் அணி, ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 6ம் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், குஜராத் டைட்டன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் 7ம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் நாளைய(18) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சண்டிகர் மைதானத்தில் நாளை(18) இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.