(புதியவன்)
தலைமன்னார் பகுதியில் தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் தனியார் தென்னந் தோட்டம் ஒன்றின் பின் பகுதியில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
சீ.சீ.ரி.வி உதவியுடன் குறித்த தோட்டத்தில் வேலை செய்யும் 48 வயதுடைய குடும்ப தலைவர் தலைமன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது.
இந்த சம்பவமானது இன்று(16) காலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:
குறித்த பத்து வயது சிறுமி நேற்று இரவு 7 மணியளவில் அப்பகுதியில் உள்ள தனது அம்மம்மா வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார் நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் அம்மம்மா வீட்டில் கேட்ட போது அங்கு வரவில்லை என்று தெரிந்ததும் பெற்றோரால் தலைமன்னார் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவு முழுவதும் தேடிய நிலையில் இன்றைய தினம் (16) காலையில் சிறுமியின் உடல் குறித்த தனியார் தென்னந் தோட்டத்தில் பின் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் சிறுமி சென்ற வீதியில் பொருத்தப்பட்ட சீ.சீ.ரீ.வி புகைப்படக்கருவியில் குறித்த சிறுமியை நபர் ஒருவர் தூக்கி செல்வது பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் குறித்த தென்னந் தோட்டத்தில் வேலை செய்யும் 48 வயது மதிக்கத்தக்க குடும்ப தலைவர் ஒருவர் தலைமன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் இவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதன் காரணமாக அவரது மனைவி சில தினங்களுக்கு முன் இவரை பிரிந்து சென்றுள்ளதாகவும் தெரிய வருகிறது. நீதிவான் வந்து பார்வையிடுவதற்காக உடல் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.