புதியவன்
மன்னார் நொச்சிக்குளத்தில் இன்று மீண்டும் கிராம மக்களை இலக்கு வைத்து இயந்திரத் துப்பாக்கி மூலம் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
இதனால் அல்லோலகல்லோலப்பட்ட கிராம மக்கள் இத்தகைய துப்பாக்கிச் சூடுகளைத் தடுத்து நிறுத்தக் கோரியும் தங்களுக்குப் பாதுகாப்புத் தரக்கேட்டும் கவனவீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்தக் கிராமத்துக்கு காவல்துறை காவல் போடப்பட்டும் அதையும் மீறி கொலை கலாசாரம் தொடர்வதாகத் தெரிவித்தே இன்றைய நாளில் கிராம மக்கள் கையில் பதாதைகள் ஏந்தி வீதி மறியல் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
'கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்?. 'எங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை', 'எங்கள் உயிருக்குப் பாதுகாப்புத் தாருங்கள்'. 'எங்கள் மக்களுக்கு நீதி இல்லையா? யார் தருவது? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
கொலையில் ஈடுபடும் நபர்கள் இனம் காட்டப்பட்டும் சட்டத்திலிருந்து அவர்கள் தப்பித்து வருவதால் ஒரு கிராமம் தொடர்ந்து அல்லோலகல்லோலப்படுகின்றது எனக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் இனம் காட்டப்பட்டனர் எனப் பாதிப்படைந்தவர்கள் தெரிவித்தும் நிற்கின்றனர்.
அண்மையில் மன்னார் முள்ளிக்கண்டல் பகுதியில் உந்துருளியில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் முள்ளிக்கண்டல் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வருடன் நெருங்கிய நபர் மீதே இன்றைய தினம் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக உயிலங்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.