(புதியவன்)
மன்னாரில் இரண்டாம் கட்டமாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்தார்.
குறித்த கடிதம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் பெரிதும் பேசுபொருளாக காணப்படும் காற்றாலை மின்சாரத்தினால் ஏற்படுகின்ற, ஏற்படப் போகின்ற பாதிப்புக்கள் குறித்து மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மின்னஞ்சல் வாயிலாக மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளோம்.
மன்னார் கரையோரப் பகுதிகளில் காற்றாலைகளை நிறுவுவது தொடர்பில் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் தமது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
காற்றாலை விசையாழி நிறுவலின் முதல் கட்டத்தால் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதுமான தணிப்பு நடவடிக்கைகள் இல்லாமல் மேலும் நிறுவல்களை மேற்கொள்ள எத்தனிப்பது குறித்து எம்முடைய கவலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் 63 முதல் 95 மெகா வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு 30 காற்றாலைகள் நிறுவப்பட்டன.
இருப்பினும், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, இயற்கை, சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் மீதான எதிர்மறையான தாக்கங்களைத் தணிக்க தெளிவான மதிப்பீடுகளை வழங்கத் தவறிவிட்டது.
இதன் விளைவாக, ஈர நிலங்கள் தொடர்பான உடன் படிக்கையின் கீழ் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் போன்ற பகுதிகளில் காற்றாலை விசையாழிகள் இருப்பதால் பறவைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள விடயம் குறித்த கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
நாங்கள் காற்றாலை மின்சார திட்டத்திற்கு எதிரானவர்கள் இல்லை. அதனை மன்னாரில் கொண்டு வருவதையே வேண்டாமென்கின்றோம் என மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்தார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.