சட்ட மருத்துவ அதிகாரியை நேரில் ஆஜராக அறிவுறுத்தல்!
புதியவன்
மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது இன்று (11) மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், தடவியல் பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரினதும் அறிக்கைகள் பெறப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சட்ட மருத்துவ அதிகாரி ராஜபக்ஸ அவர்கள் அடுத்த தவணையில் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகும் படி அறிவுறுத்தப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் வாதிடும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவிக்கையில்,
மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது இன்றைய தினம் திங்கட்கிழமை (11) மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஏற்கனவே நீதிமன்றத்தினால் கோரப்பட்ட அறிக்கை கடந்த தவணை சட்ட மருத்துவ அதிகாரி ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கையில் முழுமையாக எல்லா விடயங்களும் அடங்காத படியால் அது சம்பந்தமாக இன்று (11) நீதிமன்றத்தின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வந்திருந்தோம்.
அதாவது எடுக்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்து அதற்கான வயது, அதன் பால் நிலை ,உயிரிழப்புக்கான காரணம் ,தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருப்பதோடு பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதே நேரம் தடவியல் நிபுணத்துவ போலீசார் போன்றவர்களாலும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஒட்டு மொத்தமாக எல்லாருடைய அறிக்கைகளும் பெறப்பட்ட பிறகு தான் குறித்த வழக்கு தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் எனவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
இதனை அடுத்து நீதிமன்றமானது சட்ட மருத்துவ அதிகாரி ராஜபக்ஷ அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகும் அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதுடன் குறித்த வழக்கு விசாரணையை மீண்டும் மே மாதம் 13 திகதி அழைப்பதற்காக திகதியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.