இலங்கைக்கு கச்சதீவை தாரைவார்த்துக் கொடுத்தது காங்கிரஸும், தமிழகத்தை ஆளும் தி.மு.க.வும் தான் என்று குற்றஞ்சாட்டியிருக்கின்றார் பாரதப் பிரதமரான மோடி, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையிலேயே இவ்வாறானதொரு கருத்தை - குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார் மோடி. இதற்கு, கச்சதீவை இலங்கைக்குக் கொடுப்பதில் தி.மு.க.வுக்கு உடன்பாடில்லை, கச்சதீவு விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை தி.மு.க. அதை அன்றுமுதல் இன்றுவரை எதிர்த்தே வருகின்றது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் வழங்கியிருக்கின்றார். இருவரும் பரஸ்பரம் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், 'கச்ச தீவு இந்தியாவிடம் இருந்திருக்கவேண்டும்' என்ற கருப்பொருளில் அவர்கள் ஒன்றிப்பதை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.
தமிழக மீனவர்கள் இலங்கைக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபடுகின்றமையால் ஈழ மீனவர்கள் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டு மீனவர்கள் பொருளா தாரப் பாதிப்பையும் வருவாய் இழப்பையும் சந்தித்து வருகின்றனர். இந்தியாவின் இயந்திரப் படகுகளால் குடாநாட்டு மீனவர்களின் இலட்சக்கணக்கான பெறுமதியுடைய வலைகள் பயன்படுத்தப்படமுடியாதவாறு அறுத்தெறியப்படுகின்றமை இன்றோ அல்லது நேற்றோ இடம்பெறும் சம்பவங்களல்ல. ஆதலால், இவ்வாறான அத்துமீறிய மீன்பிடியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஈழ மீனவர்களும், இலங்கைக் கடற்படையினர் தம்மைக் கைதுசெய்யக்கூடாது என்று தமிழக மீனவர்களும் வலியுறுத்திவரும் பின்னணியில், 'சுச்சதீவின் உரிமமாற்றம்' தொடர்பான மோடியினதும் ஸ்டாலினதும் குற்றச்சாட்டுகளும் சுருத்துமோதல்களும், அத்துமீறிய மீன்பிடிக்கான ஆரோக்கியமான தீர்வு இப்போதைக்குச் சாத்தியமில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றன. ஏனெனில், 'கச்சதீவை வழங்கியிருக்காவிட்டால் தமிழக மீனவர்களின் இன்றைய அத்துமீறிய மீன்பிடி சட்டபூர்வமானதாக இருந்திருக்கும்' என்ற விவாதப்புள்ளியில் இருவரும் ஒன்றிணைகின்றனர்.
இந்தியாவிலும் இலங்கையிலும் இப்போது தேர்தல்காலம். இந்திய மக்களவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ. க.வை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து 'இன்டியா கூட்டணி' என்ற பெயரில் ஒன்றித்திருக்கின்றன. இந்தக் கூட்டணி ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்குப் பல்வேறுபட்ட வியூகங்களைத் தனித்தனியாக வகுத்து வைத்திருக்கின் றது. பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம், காஷ் மீரில் யூனியன் அதிகாரம் என்று செல்லும் இந்தப் பட்டி யலில் தமிழகத்தின் 'பேசுபொருளாக' அமைந்திருப் பது மீனவர்களின் பிரச்சினை. இலங்கைக் கடற்படையினரின் தொடர் கைதுகளுக்கு எதிராகத் தமிழக மீனவர்கள் தற்போது முன்னெடுக்கும் போராட்டம் முற்று முழுதான அரசியலாக அங்கு மாற்றப்பட்டுள்ளது. 'இலங்கைக்குள் எல்லைதாண்டாதீர்கள்' என்று சொல்வதற்குப் பதிலாக, 'கச்சதீவு இருந்திருந்தால் இது சட்டபூர்வமான மீன்பிடிதானே' என்ற எண்ணம் மீனவர்களிடத்தில் விதைக்கப்படுவதானது அவ்வளவு ஆரோக்கியமான அறிகுறி இல்லை.
குடாநாட்டின் கடற்பரப்புகளில் இனிவரும் காலங்களிலும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் நிறைந்திருக்கும். அவை 'கச்சதீவு எங்களுடையது' என்ற உரிமைக்கோரலின் பாற்பட்டதாக அமைந்திருக் கும் என்பதை நாம் வலுவாக நம்பலாம். இலங்கையிலும், வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளை அணுகும் கைங்கரியம் அரசியல் மயப்பட்டதாகமாறிவிட்ட பின்னணியில், ஆலைவாய்க் கரும்பாக நெரிபடப்போவது என்னமோ குடாநாட்டு மீனவர்கள்தான். 'பூனைக்கு விளையாட்டு: கண்டெலிக்கு சீவன் போகுது...!"
(19.03.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
py2ooq
3al6hq
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.