அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான 'கோப்' குழுவின் தலைமைப் பதவிக்கு பெரமுனவின் முக்கியஸ்தரான ரோஹித அபேகுணவர்த்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக்குழுவிலிருந்து பதவி விலகியுள்ளனர். எந்த நோக்கத்துக்காக 'கோப்' குழு அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் ரோஹித அபேகுணவர்த்தனவின் தலைமையின் கீழ் சாத்தியப்படப் போவதில்லை என்பதே. 'கோப்' குழுவில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொல்லும் ஒற்றைக் காரணமாக அமைந்துள்ளது.
பகிரங்கக் கூட்டுத்தாபனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் ஏதேனும் எழுத்திலான சட்டத்தால் அரசாங்கத்துக்கு உரித்தாக்கப்பட்ட அமைப்புகளின் கணக்குகளை, கணக்காய்வாளர் நாயகத்தின் உதவியுடன் பரிசீலனை செய்வது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) பிரதான கடமையாகக் காணப்படுகின்றது. இது தொடர்பான அறிக்கையிடல்களை 'கோப் 'குழு காலத்துக்குக் காலம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவேண்டும். எனினும், 'குற்றத்தரப்பு என்று அடையாளப்படுத்தும் கூட்டுத்தாபனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீதான அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரம்'கோப்' குழுவுக்கு வழங்கப்படவில்லை.
அரச நிறுவனங்களின் மோசடி தொடர்பாக ஆராயும் குழுவுக்கு, ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைவராக நியமிக்கப் படுவதானது எவ்வாறு குற்றத்தரப்பை அடையாளம் காண உதவும்? ஆதலால், 'கோப்' குழுவின் தலைமைப் பதவி உள்ளிட்ட அதிகாரக் கதிரைகள் எதிர்க்கட்சிக்கே வழங்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் இணைந்து முன்வைக்கும் கூட்டுக்கோரிக்கையாக அமைந்திருக்கின்றது. இவ்வாறிருக்கையில், கோப் குழுவின் தலைமைப் பதவி ரோஹித அபேகுணவர்த்தனவுக்கு வழங்கப்பட்டமையானது, தேர்தல் காலத்தில் கோப் குழுவின் மூலம் ஆளும் பெர முனவின் மோசடிகள் வெளிவராமல் தடுப்பதற்கான உத்தி என்பதே இப்போது நாடாளுமன்றத்தில் பரவலாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு.
குற்றமிழைக்கும் தரப்பே நீதியைத் தேடுவதென்பது இலங்கைக்குப் புதிதல்ல. இலங்கையில் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் போர்க் குற்றங்கள், பொருளாதார நெருக்கடிகள் என அனைத்திலும் இந்தச் சாபக்கேடானதும் பிற்போக்குத்தனமானதுமான போக்குத்தான் இந்த நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரச் சிதில நிலைக்குப் பிரதான காரணம். ஆதலால், திருடன் கையில் திணிக்கப்பட்ட சாவியாக, ஆளும் தரப்பிடமே அதிகாரத்தைக் கொடுக்கும் 'மந்த சிந்தனையை' கைவிட்டு, 'மிஸ்டர்க்ளீன்' என்று அறியப்படும் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சியில் இருந்து பொருத்தமான ஒருவரை 'கோப்' குழுவின் தலைமைப் பதவிக்கு நியமிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயமிருக்கும்...!
(21. 03.2024-உதயன் பத்திரிகை)
oj95hm
un5oom
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.