'நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டது மீண்டு கொண்டிருக்கின்றது' என்று ஆட்சியாளர்கள் பெருமை பீற்றிக்கொண்டாலும் -உண்மையான நிலைமை அவ்வாறு இல்லை. பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்கள் எதிர்கொண்ட அழுத்தங்களும் அந்த அழுத்தங்களால் ஏற்பட்ட நெருக்கடிகளும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. . நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கடந்தகாலங்களில் இலங்கை ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட முன்யோசனையற்ற சுயலாபங்கள் சார்ந்த முடிவுகளும் ஊழல்களுமே பிரதான காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. நாட்டில் தொடர்ச்சியாகப் பதவியிலிருந்த அரசாங்கங்களும் அவற்றில் அங்கம் வகித்த அரசியல் வாதிகளில் மிகப்பலரும் மக்கள் பணத்தை முறையற்ற விதத்தில் தமது தனிப்பட்டநன்மைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பது ஊரறிந்த இரகசியம். இலங்கைக்கு நெருக்கடியில் கைகொடுத்த சர்வதேச நாணயநிதியமும் இதனைச் சுட்டிக்காட் டியிருந்தது. ஊழல்களை ஒழிப்பதற்குக் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டிருக்கின்றது என்று அரசாங்கம் கூறுகின்றபோதும் நாட்டு நிலைமை அதற்கு மாறாகத்தான் இருக்கின்றது. செலவுகளுக்கு ஏற்ற வருமானம் இன்றிச் சொத்துகளையும் சேமிப்புகளையும் கரைத்தே மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார நெருக்கடிகளால் சொத்துகளை அடகு வைப்போரின் விற்போரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்தப் புள்ளிவிவரங்களில் உள்ளடக்கப்படாத இன்னும் பல சங்கதிகள் இருக்கக்கூடும். இருப்பதை விற்று வயிற்றை நிரப்பும் பரிதாப நிலைமையிலேயே நாட்டு மக்கள் இப்போது இருக்கின்றனர்.
நாட்டின் எதிர்காலம் நிச்சயமற்றதன்மையில் இருக்கும் நிலையில் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் சுயநலன்களுக்காக நாட்டை மீண்டும் படு குழிக்குள் தள்ளும் கைங்கரியத்தை ஆரம்பித்திருக்கின்றனர். நாட்டுக்குத் தேவையான திட்டங்களை நடை முறைப்படுத்தாமல் அரசியல் நோக்கத்துடன் வாக்குகளை இலக்குவைத்தே தற்போதும் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் இயங்குகின்றனர். ஊழல்களைத் தடுத்து ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்கவேண்டிய அரசாங்கம் அதைச்செய்யாது தவறுகளைச் செய்தவர்களைப் பாதுகாப்பதுடன்- அவர்களுக்குப் பதவிகளைக் கொடுத்து ஆதாயம் தேடவும் முற்படுகின்றது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையால் அரசதலைவர்க் கதிரையில் அமர்ந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்கவும் இந்த வழியிலேயே பயணிக்கின்றார். நாட்டின் மீட்பராகத்தன்னை அடையாளப் படுத்தி மக்களின் அபிமானத்தைப்பெற முயற்சிக்கும் ரணில் விக்கிரமசிங்க செயற்பாட்டு ரீதியில் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகவே இருக்கின்றார். பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் ஒருவர் அண்மையில் 'கோப்' குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சம்பவமும் ஆட்சியாளர்களின், ஆட்சியில் பங்கெடுத்திருப்பவர்களின் வழிதவறிய பயணத்தையே எடுத்துக்காட்டுகின்றது.
இலங்கை நெருக்கடியில் இருந்து விடுபட்டு. எவரிடமும் கையேந்தாத நாடாக மாற வேண்டுமானால் ஊழல்கள் ஒழிக்கப்படுவதும் மிக அவசியமான ஒன்று என்பது நிதர்சனம். ஆனால் இலங்கையில் இது நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றே தோன்றுகின்றது. அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒட்டுமொத்தமாக மாற்றப்படும் வரையில் ஒருவரை ஒருவர் காப்பாற்றி மக்கள் பணத்தைக் கொள்ளையிடும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். நாட்டுமக்கள் அதை உணர்ந்து செயலாற்றும் வரையில் ஆட்சியாளர்களின் - அரசியல்வாதிகளின் பாவச்சுமையை மக்களே தலையில் சுமந்தாக வேண்டும்.
(22.03.2024 உதயன் பத்திரிகை)
kkwy5w
v0bblj
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.