வெளிநாட்டு ஆசையால், அதிலும் குறிப்பாக கனடாவுக்குச் சென்றுவிட வேண்டும் என்ற ஆசையால் கோடிக்கணக்கான பணத்தை இடைத்தரகர்களை நம்பிக்கொடுத்து ஏமாந்த, ஏமாறுகின்ற சம்பவங்கள் தமிழர் தாயகத்தி ஏராளம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொருநாளும் இது தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வாராவாரம் அது தொடர்பான செய்திகளையும் எச்சரிக்கைக் குறிப்புகளையும் ஊடகங்களும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், கனடா மோகம் எம்மவர்களின் மனங்களை விட்டு அகலுவதாக இல்லை. இத்தனைக்கும் கனடா, பாலும் தேனும் பாய்ந்தோடும் பூமியல்ல. இதை தம் உள்ளத்தில் இருத்தி தமது பயணப்பாடுகள் தொடர்பில் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். பொருளாதாரத்தளம் பலை எதிர்கொண்டுள்ள மேற்குநாடுகளில் இன்று கனடாவும் ஒன்று. இன்னும் சொல்லப்போனால் மேற்கு நாடுகளில் அண்மைக்காலமாகப் பல்துறைப் பிரச்சினைகளில் சிக்கியுள்ள ஒரே நாடாகவும் கனடாவே காணப்படுகின்றது. வேலையில்லாத் திண்டாட்டம், வீடில்லாப் பிரச்சினை, பணவீக்கம் இவை மூன்றும் இன்று கனடாவில் இருக்கும் அளவுக்கு எந்தவொரு மேற்கு நாடுகளிலும் இல்லை. இவை மூன்றையும்தான் தனது பிரதான தேர்தல் பரப்புரைக் கருவியாக கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவியர் மேற்கொண்டு வருகின்றார். ஆளும் லிபரல் கட்சியும், அதன் தலைவரும், பிரதமருமான ஜஸ்ரின் ட்ரூடோவும் மக்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாதவகையில் இன்று செல்வாக்கிழந்து போனமைக்கு வேலையில்லாப் பிரச்சினையும், வீடற்றவர்களின் போராட்டமும்தான் முதன்மைக் காரணம்.
கனேடியர்கள் மத்தியில் தன் செல்வாக்கை மீண்டும் வலுப்படுத்தி ஆட்சியைத் தக்கவைக்கவேண்டுமாயின், பணவீக்கத்தைக் குறைக்கவேண்டும், வீடற்றவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கவேண்டும் மற்றும் கனேடியர்களுக்குத் தொழில்வாய்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கில், தற்போது தன் செயற்றிட்டங்களை ஆரம்பித்துள்ளது ஆளும் லிபரல் அரசாங்கம். குடியேறிகளின் வருகையைக் கட்டுப்படுத்தினால் பணவீக்கம், வேலைவாய்ப்பு மற்றும் வீடற்றவர்கள் பிரச்சினை ஆகிய மூன்று 'மாங்காய் களையும்' ஒரேகல்லில் வீழ்த்திவிட முடியும். இதை இறுக்கமாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பு குடிவரவு, குடியகல்வு அமைச்சர் மார்க் மில்லரின் 'இரும்புக் கரங்களிடம்' ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. கனடாவுக்குச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையையும், குறிப்பிட்ட சில நுழைவிசைவுகளையும் கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட மில்லர், தற்போது தற்காலிக விசாக்கள் மூலம் கனடாவுக்குள் வருவோரையும், அகதிகளாகக் கனடாவுக்குள் வரு வோரையும் கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டியிருக்கின்றார். சுகாதாரத்துறையைத் தவிர்த்து வேறு எந்தத்துறையிலும் கனேடியர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதை அவர் கொள்கையாக அறிவித்திருக்கின்றார்.ஆக, கனடாவுக்கு இதுவரை சென்றவர்களே அங்கு வாழமுடியாமல் அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ரயில் பயணங்கள்மூலம் 'எல்லைபாயும்' சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ள நிலையில், கனடா என்பது சொர்க்கபுரி என்ற தோரணையில் ஒவ்வொருநாளும் இங்கிருந்து பலநூறுபேர் அங்கு படையெடுப்பது முட்டாள்தனத்தின் உச்சமே.
சுற்றுலா விசாமூலம் பல்லாயிரக் கணக்கானவர்கள் அண்மைக்காலமாக கனடாவுக்குச் சென்றிருந்த நிலையில், அவ்வாறு சென்றவர்கள் அகதிகளாக அடைக் கலம் கோரினால், அவர்களை 'வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் திட்டத்தையும்' கனடா தற்போது நடைமுறைப்படுத்திவருகின்றது. நிலைமை இவ்வாறாக இருக்கையில், களநிலைவரங்களையும் உண்மைத்தன்மைகளையும் அறியாது மேற்கொள்ளும் இந்தப் பயணங்கள் எம் எதிர்காலத்தை நாமே கொன்று புதைக்கும் கைங்கரியமே அன்றி வேறில்லை...!
(25. 03.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.