புதியவன்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார். இந்நிலையில் இந்தத் தாக்குதலை ஏவியவர்களால் அது தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகவே பார்க்கப்படுகின்றது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் அரச தலைவர் தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவர வாய்ப்பு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியைப் பொறுத்த வரையில் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவை வழங்குவதாக நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம் எனவும் முன்னாள் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது கட்சித் தலைமையகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கருணா இவ்வாறு தெரிவித்தார்.
இன்று ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தனக்கு இது தொடர்பாக தெரியும் எனக் கூறுகின்றார்.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பாக இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.
கோட்டபாய ராஜபக்ஷவும் பிள்ளையானும் புத்தகம் வெளியிட்டுள்ளனர். இதனை ஒரு முதலை கண்ணீர் வடிப்பதற்கு சமமாக தான் பார்க்கின்றோம்.
ஏனென்றால் அசாத் மௌலானா போன்றவர் சிறந்த ஆதாரங்களை நிரூபித்து இருக்கின்றார். அவர் நீண்ட காலமாக அந்தக் கட்சியிலே ஒரு முக்கிய உறுப்பினராக, செயலாளராக அல்லது தலைமை ஆலோசகராகச் செயற்பட்டவர் என்பது உண்மையான விடயம்.
ஏனென்றால் அவர் கூறிய விடயங்களை எவரும் மறுப்பதற்கு இல்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏன் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற கேள்வி அனைத்து மக்களுக்கும் எழுந்திருக்கின்றது.
இன்று பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு புத்தகத்தையும் வெளியிடவில்லை. இதை ஏவியவர்களால் புத்தகம் வெளியிடப்பட்டது என்பது தங்களது குற்றங்களை மறைப்பதற்காக, அதாவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகத்தான் பார்க்கப்படுகின்றது.
உண்மையிலே இதற்கான தீர்வு என்பது ஆண்டவரால் வழங்கப்படும். அரச தலைவர் தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
தற்போது முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். தான் அனைத்து இரகசியங்களையும் வெளியிடுவேன் என்று. அதனை நாங்கள் வேடிக்கையாகப் பார்க்க முடியாது.
ஏனென்றால் அவர் இலங்கையில் ஒரு பொறுப்பு வாய்ந்த அரச தலைவர். அவர் கூறுகின்ற போது இதற்குப் பின்னால் பாரிய உண்மைகள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இது எதிர்காலத்தில் வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டு இதற்குரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.- என்றார் கருணா (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.