புதியவன்
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக ரீதியான பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக 21 ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கறுப்பு சித்திரை புத்தாண்டு என அடையாளப்படுத்தி கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு உந்துருளியில் ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த உந்துருளி ஊர்வலத்தில் இளைஞர் கழகங்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் கறுப்புக் கொடிகள் ஏந்தியவாறு பிரதேச செயலக முன்றலிலிருந்து ஆரம்பமாகி மணல்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியன்மேடு, துறை நீலாவணை, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை நகரப்பகுதி ஊடாக சென்று மீண்டும் பிரதேச செயலக முன்றலில் வந்தடைந்ததுடன் பல்வேறு கோஷங்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் முற்பகல் பிரதேச செயலகத்தின் முன்பாக கறுப்பு பொங்கல் பொங்கப்பட்டது. இந்நிலையில் அங்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் நீதிமன்ற கட்டளைப்படி பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் பொதுச்சொத்துக்கள் சேதமாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்காக போராட்டக்காரர்கள் என மூவரின் பெயரை குறிப்பிட்டு அப்பகுதியில் கடிதம் ஒன்றினை வழங்கினர்.
இதனால் அங்கு சிறு பதற்றம் எற்பட்டது. பின்னர் பிரதேச செயலகம் மீது திணிக்கப்படும் நிர்வாக அடக்கு முறைக்கும், அத்துமீறல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என இன்று கறுப்பு சித்திரை வருடப்பிறப்பாக பிரகடனப்படுத்துவதாகவும் எனவே பிரதேச செயலகத்துக்கான நிர்வாக உரிமையை வென்றெடுக்க அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கோரி நின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.