எழிலன்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி நாம் அனைவரும் சந்தேகப்பட்டதை விடவும். நிபுணர்கள் எதிர்வுகூறியதை விடவும் பல மடங்கு பெரிதாக இருப்பதற்கான அத்தனை ஏது நிலைகளும் தென்படத் தொடங்கியிருக்கின்றன. கொக்குத்தொடுவாயில் தற்போது அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பகுதி. புதைகுழியின் சிறு துண்டே என்றும், வீதிக்குக் கீழ்ப்பகுதி வரை புதைகுழி விரிவடையலாம் என்றும் அதிநவீன ஸ்கான் ஆய்வில் மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அங்கிருந்து வெளிவரும் கள ஆய்வுத் தகவல்களும்கூட இதையேதான் சொல்கின்றன. இறுதிப்போர் தொடர்பான விடயங்கள் எப்போதெல்லாம் வெளிச்சத்துக்கு வருகின்றனவோ - எப்போதெல்லாம் இவ்வாறான விடயங்கள் பேசுபொருள் ஆகின்றனவோ, அப்போதெல்லாம் ஒருவித மெத்தனப்போக்கையே அரசாங்கம் கைக்கொண்டது. அதன் தொடர்ச்சியாகவே கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்திலும் அரசாங்கம் நடந்துகொண்டது. இந்தப் புதைகுழி தொடர்பான தகவல்கள் வெளிவந்த ஆரம்ப நாள்களில் 'போர் இடம்பெற்ற பகுதியில் மனிதப்புதைகுழிகளும் இருக்கவே செய்யும்' என்று வெகு சாதாரண மாகக் கருத்துத் தெரிவித்திருந்தார் நீதி அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ச.
ஆனால் இங்கே முரண்நகை என்னவென்றால், நீதி அமைச்சர் சொல்வதைப்போன்று போர் இடம்பெற்ற பகுதிகளில் மனிதப்புதை குழிகள் இருக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. சர்வதேசப் போரியல் விதிமுறைகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. எந்தவொரு போர் சர்வதேச விதிகளுக்கு முரணாகப்போகின்றதோ ஏற்றுக்கொள்ளப்பட்ட போரியல் நிபந்தனைகளை எல்லை மீறுகின்றதோ அப்போதுதான் 'மனிதப் புதைகுழிகளின்' தேவை அங்கு உணரப்படும். மற்றும்படி, நீதியான நியாயமான போருக்கும் மனிதப்புதைகுழிகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை. குர்திஷ்தான் சிரியா ஈராக் முதல் தற்போது உக்ரைன் - ரஷ்யா இடையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போர்வரையில் இனங்காணப்பட்ட அத்தனை மனிதப் புதைகுழிகளும் அந்தந்தப் பகுதியில் இடம்பெற்ற போர்க்குற்றத்தையே பறைசாற்றின. இவ்வாறானதொரு பின்னணியில், கொக்குத்தொடுவாயில் இனங்காணப்பட்டிருக்கும் மனிதப்புதைகுழி பலமான ஐயங்களையே பறைசாற்றி நிற்கின்றது.
அத்துடன், இறுதிப்போரின் பின்னர் இலங்கையில் மனிதப்புதைகுழி தொடர்பான கருத்தியல்கள் தோற்றம்பெறுவது இதுவொன்றும் முதல்முறையல்ல. இதற்கு முன்னரும் விரல்விட்டு எண்ணமுடியாத எத்தனையோ மனிதப்புதைகுழிகள் தாயகத்திலும், தென்னிலங்கையிலும் அவதானிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த மனிதப்புதைகுழிகள் அதிகாரக் கதிரைகளின் அழுத்தத்தால் மூடி மறைக்கப்பட்டனவே அன்றி நீதியானதும் நியாயமானதுமான விசாரணைகளை எதிர்கொள்ளவேயில்லை. இவ்வாறானதொரு நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்திலும் நீதி கிட்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழர்களுக்கு இல்லவேயில்லை. ஆனால், ஒட்டு மொத்த மனிதப்புதைகுழி விவகாரங்களிலும் சர்வ தேசம் தலையிடுவதற்கான ஓர் ஆரம்பப்புள்ளியாக இந்த விவகாரம் அமையவேண்டும் என்ற ஏக்கம் தமிழர்களிடத்தில் மிகைந்திருக்கின்றது. இறுதிப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும், மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் சர்வதேசம், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிகள் போன்ற பெரும் பிடிமானங்கள் கிட்டுகின்றவேளையில் காக்கின்ற மௌனம்தான் இலங்கை அரசாங்கத்தின் மெத்தனத்துக்கு முழுக்காரணம். சர்வதேசம் இப்போதாவது இதை உணருமா? [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.