(ஆதவன்)
ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உறுதியாகியுள்ள சூழலில் அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தமிழர் தரப்பில் அதிகரித்துள்ளன. தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் கள மிறக்கப்படவேண்டும் என்ற கருத்து அதிகமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை தமிழர்தரப்பு தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் வழமைபோல முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இதே நேரத்தில், தமிழர்தரப்பு பொதுவேட்பாளரை நிறுத்துவது என்பதன் பின்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க இருக்கக்கூடும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதித் தேர்தல்கள் அல்லது முக்கியமான விவகாரங்கள் தொடர்பில் தமிழ்த்தரப்பின் பிரதான தலைவராக இருக்கும் இரா.சம்பந்தன் நேரகாலத்துடன் முடிவு எடுப்பவர் அல்ல. நேரம் நெருங்கி வரும்போது தான் நினைத்த முடிவுக்கு மற்றவர்களை வரச்செய்வார். அல்லது தனது முடிவைத் திணிப்பார். இதுவே அவரது வழக்கமாக இருந்து வந்தது. இப்போதும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழர் தரப்பு நேர காலத்துடன் முடிவு எடுக்காமல் இருக்கவேண்டும் என்பதும், அதன் ஊடாக தென்னிலங்கை வேட்பாளர்களுடன் பேரம் பேசும் வலுவை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னரே தேர்தல்கள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகள் சுயாதீனமாக முடிவு எடுத்தன. அதுவரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்குரிய வழிகாட்டுதல்களை வழங்கி இருந்தனர் 2010, 2015, 2019 என மூன்று ஜனாதிபதித் தேர்தல்களை தமிழர் தரப்பு எதிர் கொண்டிருக்கின்றது. தமிழர் தரப்பு ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர்கள் 2010, 2019 ஆம் ஆண்டுகளில் தோல்வியைச் சந்தித்திருந்தனர். 2015 ஆம் ஆண்டில் மாத்திரமே தமிழர் தரப்பின் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற முடிந்தது. அந்தத் தேர்தலில் தமிழர் தரப்பு ஆதரித்த மைத்திரிபால சிறி சேனவும், தமிழர் தரப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 'இதயத்தால் எழுதப்பட்ட ஒப்பந்தம்' என்று மைத்திரிபால தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு இடையிலான ஒப்பந்தத்தை விளித்திருந்தாலும், அவரது நல்லாட்சி அரசில் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் இறுதிக் கட்டத்தில் குழப்பப்பட்டிருந்தன.
அதேநேரம் ஜனாதிபதி வேட்பாளர்களான சரத் பொன்சேகா மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரை தமிழர் தரப்பு ஆதரித்திருந்தது. ஆனால் அவர்கள் தேர்தலில் தோற்ற பின்னர் தமிழர் விரோதப்போக்கை வெளிப்படையாகக் காண்பித்திருந்தனர். இவ்வாறான தொரு சூழலில் தென்னிலங்கையில் ஜனாதிபதி வேட் பாளராகக்களமிறங்குபவர் எவராக இருந்தாலும் அவர்கள் பௌத்த சிங்களவாக்குகளைத்தான் குறிவைப்பார்கள். தமிழர் தரப்பின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக எத்தனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டாலும் அவை எதுவும் தேர்தல்களின் பின்னர் நிறைவேற்றப்படாது என்பதுதான் கடந்த காலப் பட்டறிவு. நிலைமை இதுவாக இருக்கையில் தென்னிலங்கையுடன் ஜனாதிபதித் தேர்தலை முன்னிறுத்திப் பேரம் பேசுவது என்பதும் சந்தேகம் தான்.
தமிழர்தரப்பிலிருந்து பொதுவேட்பாளரைகளமிறக்குவது என்பதும் அவருக்காக ஒட்டுமொத்த தமிழ் பேசும் சமூகமும் வாக்களிப்பதும் வித்தியாசமான அணுகு முறைதான். எனினும் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் களமிறங்குவது தென்னிலங்கையில் சிதறியிருக்கும் சிங்களவர்களை ஓரணியில் கொண்டு வருவதற்கும் வாய்ப்பாகிவிடும். தென்னிலங்கை தரப்புடன் பேரம் பேசுவதோ அல்லது தென்னிலங்கைத் தரப்பில் யாராவது ஒருவரை ஆதரிப்பதோ முடியாத காரியம். மிகச்சிக்கலான இந்த அரசியல்நிலையை தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப்போகின்றது என்பதில் தான் எமது இனத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.