ஆதவன்.
காஸாப் பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று பத்துக்கும் மேற்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து வலியுறுத்தியிருக்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ஒருநாட்டை நிறுவி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியாது என்றும், இரண்டு நாடுகள் நிறுவப்பட்டு அந்த இரண்டு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்படுவதன் ஊடாகவே இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மனோநிலையால், காஸா முனையில் ஏற்பட்டுள்ள போர்நிலை தொடர்பிலும் அங்கு தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பிலும் தற்காலத்தில் உலகெங்கும் விவாதங்கள் தீவிரம்பெற ஆரம்பித்திருக்கின்றன. இது எப்போதோ ஆரம்பித்த காரியம்தான் என்றபோதிலும், உலகநாடுகள் - குறிப்பாக மேற்கத் தேய தேசங்கள் - தங்களின் ‘இராஜதந்திரக்' கொள்கைகளில் தளர்வுகளை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த விவகாரம் தற்போது பற்றியெரியத் தொடங்கியிருக்கின்றது. "இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மனோநிலை தவறு. கிழக்கு ஜெருசலேமை மையமாகக்கொண்ட பலஸ்தீனத்தை இஸ்ரேல் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். 'இரு நாடுகள்' என்ற கொள்கைதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு" என்பதை உலக நாடுகளின் தலைவர்கள் தற்காலத்தில் எந்தச் சமரசமும் இன்றி ஏற்றுக்கொண்டு வரும் பின்னணியில், அதே கருத்தை மேற்கத்தேயநாடுகளின் சிந்தனையின் பாற்பட்டு - தனது பங்குக்கு பிரதி யெடுத்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பானது பின்புலமின்றிய விடயமல்ல. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நேட்டோ கூட்டணியிலுள்ள இராணுவ வல்லா திக்கத்தைக் கொண்ட நாடுகளின் அனுசரணையில்தான் இஸ்ரேல் இந்தத் தீவிரமானதும் - கொடூரமானதும் மிருகத்தனமானதுமான ஆக்கிரமிப்பை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில், பலஸ்தீனத்தின் பக்கமுள்ள நியாயப்பாட்டை ‘நாணயங்களால் நெய்யப்பட்ட வர்த்தகச் சுழற்சிக்கு அப்பாற் பட்டு தெரிவித்தமைக்காக ரணிலை ஒருமுறை பாராட்டலாம். ஆனால், பலஸ்தீனத்துக்காக உருகும் ரணில், இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்ன நடவடிக்கையை முன்னெடுத்தார் என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாததாகின்றது.
இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமானது என்ற சித்தாந்தமே 30 ஆண்டுகளாக இந்தத் தீவு குருதிச் சகதிக்குள் குளித்தெழும்பக் காரணமானது. இதிலிருந்து எந்தப் பாடத்தையும் இலங்கை இன்னமும் கற்றாக வில்லை. தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுதல், சிங்களப் பேரினவாதத் திணிப்பு, தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்க மேற்கொள்ளப்படும் முனைப்பு, மேய்ச்சல் தரவைகள் பறிக்கப்படுதல், தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படுதல் என இஸ்ரேலிய மனோநிலைக்கு இம்மியும் குறைவில்லாத விடயங்களே தமிழர் தாயகத்தில் இன்று இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இலங்கைக்குள் இன்னமும் தீர்க்கப்படாத - தீர்க்கப் படவிரும்பாத பிரச்சினைகள் எத்தனையோ இருக்கும் போது, இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையிலான மத்தியஸ்தம் என்பது தேவையற்றதொன்று. இஸ்ரேலை அல்லது ஹமாஸை நோக்கி ரணில் ஒரு விரல் நீட்டும் போது இதர நான்கு விரல்களும் கொழும்பை நோக்கியவாறே இருக்கின்றன. இந்தப் புரிதலை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொள்ளட்டும். தான் மேற்கத்தேய செல்லப்பிள்ளை என்பதற்காக, இலங்கையும் மேற்கத்தேய நாடுகளின் தகுதியுடன் - திராணியுடன் இருக்கின்றது என்று ஜனாதிபதி எண்ணிவிட்டார்போலும். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.