(ஆதவன்)
நேரம் பொன்னானது என்பார்கள். இன்றைய உலகில் ஒவ்வொருவரும் ஒரு அவசரத் தனத்துடனேயே இயங்கிக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு செக்கனையும் வீணாக்காது தாவிச் சென்றுவிடவே முயற்சிக்கின்றோம். ஒரு நிமிடம் முந்திச் செல்வது மட்டுமல்ல சில சந்தர்ப்பங்களில் ஒரு நிமிடம் பிந்திச் செல்வதும் நன்மை பயக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிதல் இன்மையே வடக்கில் நடக்கும் தொடருந்து விபத்து உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கின்றது. நாட்டின் ஏனைய இடங்களை விடவும் தொடர்ந்தும் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வடக்கில் உயர்வாகவே இருக்கின்றது. பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளால் ஏற்படும் விபத்துக்களைத் தாண்டி தொடருந்து போக்குவரத்தின் அனுபவமற்ற தன்மை - அவசரத்தன்மை என்பனவே பெரும் பாலான விபத்துகளுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. தொடருந்து கடவைகளில் காத்திருக்கும் பொறுமை இல்லாது அறிவுறுத்தல்களை அனுமதிக்காது செயற்பட்டு, உயிரிழந்தவர்கள் பலர் நாள்களுக்கு முன்னர் சில கிளிநொச்சியில் நடந்த விபத்துக்கும் இந்தப் பொறுமையின்மையே காரணம்.
இலங்கையில் பொதுமக்கள் பெரும்பாலும் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை இதற்குக் காரணம் மேற்கத்தேய நாடுகளில் காணப்படும் இறுக்கமான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் இலங்கையில் இல்லாமையே. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் தண்டனைகளும் குறைவாகவே இருக்கின்றன. தொடருந்து விபத்துகளில் பெரும்பாலானவைக்கு தொடருந்து கடவைகளைக் கடக்கும்போது அவதானமின்றிச் செயற்படுவதும், தொடருந்து கடவைச்சமிக்ஞைகளை மதிக்காது செயற்படுவதும் பிரதான காரணங்களாக இருக்கின்றன. சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் மூடப்பட்டிருந்த தொடருந்து கடவைக்குள் ஒருவர் நடந்து சென்று, தண்ட வாளத்தைக் கடப்பதும், அதனைக் கண்ணுற்ற உந்துருளியில் வந்த ஒருவர் தண்ட வாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயிலிலுடன் அங்கே மோதுவதும் அங்கே இருந்த கண்காணிப்புக் கமெரா ஒன்றில் பதிவாகியிருக்கின்றது.
இவ்வாறான விதிமீறல்களை மேற்கொள்வோர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலேயே இவ்வாறான உயிரிழப்புகளைத்தடுக்க முடியும். பிரதானமான இடங்கள், கடவைகளில் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்துவதன் ஊடாகவோ அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான முறைமைகள் மூலமோ கண்காணிக்கும் செயன் முறை உருவாக்கப்படுவது அவசியம். தொடருந்து விபத்துகளில் மட்டுமல்லாது போக்குவரத்து விதி முறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். சட்டத்தைச்சரியாக நடைமுறைப்படுத்துவன் ஊடாக எந்தளவு தூரம் இந்த விபத்துகளைக்கட்டுப்படுத்த முடியும் என்பது தொடர்பாக சட்டத்தை நடை முறைப்படுத்தும் நிறுவனங்கள் ஆராய வேண்டும். பிறநாடுகளில் விபத்துகளைக் குறைப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்பது தொடர்பாகவும் சிந்தித்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகின்றது. தண்டனைகள் கடினப்படும் போது குற்றங்களும் குறையும். (ச)
(06.02.2024 உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.