இனியும் கிள்ளுக்கீரையல்ல!
இனியும் கிள்ளுக்கீரையல்ல!

இந்தியா இதுநாள்வரையில் ஏமாற்றியதைப் போன்று இனியும் எம்மை ஏமாற்ற முடியாது. அவ்வாறு ஏமாற்ற எத்தனித்தால் - ஏமாற்றிக்கொண்டே இருந்தால், இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவு முற்றாக அறுக்கப்பட்டு, ஈழத்தமிழர்களுக்கும் தொப்புள்கொடிகளான தமிழகத் தமிழர்களுக்கும் இடையிலான உறவுகள் மட்டும் எஞ்சிநிற்கும் என்று வடக்கு - கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் எச்சரித்துள்ளன. சாந்தனுக்கான அஞ்சலிப்பை முன்னிட்டு, கட்சிக் கொடிகளுக்குக் கீழ்ப்பட்டதாக அல்லாமல் 'ஒரு சிவில் சமூகமாக' வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை மிகக் கனதியானது. இன்னும் சொல்லப் போனால் பொதுமக்களின் தற்கால மனோநிலையை யும், இந்தியா மீதான தமிழர் மனங்களில் மாறிவரும் பார்வையையும் இந்த அறிக்கை வலுவாகவே கட்டியம் செய்கின்றது. ஆதலால், சிவில் சமூகத்தின் இந்த அறிக் கையை, கட்சி நிலைப்பாட்டுக் கண்டன அறிக்கையாக இந்தியா கொள்ளக்கூடாது. இது ஓர் இனக்குழுமத்தின் மனக்குமுறலும், அந்த இனக்குழுமத்தின் ஏமாற்றத்தின் வெளிப்பாடுமாகும்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் முப்பத்தியிரண்டு ஆண்டுகள் சிறைக்குள் அடைக்கப்பட்டு, இந்திய இலங்கை, தமிழக அரசுகள் முற்றாக கைவிட்ட நிலையில், நீதிமன்றத்தின் தற்துணிவின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட சாந்தனுக்கு தான் நேசித்த மண்ணை, தான் நேசித்த மக்களை, தன் தாயாரை ஒருநாள்கூட முத்தமிட்டு விடமுடியாத அவலநிலைமை ஏற்பட்டிருக் கின்றது என்றால் அதற்கு இந்திய அரசின் சதித்திட்டமே முதன்மைக் காரணம். தீவிர நோயாளியாகச் சிறை மீண்ட சாந்தனை குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன்கூட இந்திய - இலங்கை - தமிழக அரசுகள் அணுகவில்லை என்பதே வெளிப்படை உண்மை.

இந்தியாவைப் பொறுத்தவரையில், ஈழத்தமிழர்கள் எனப்படுவோர் பிராந்தியத்தில் தன் வல்லாதிக்கத்தைப் பலப்படுத்தவும் நிலைப்படுத்தவும் தேவைப்படும் கிள்ளுக்கீரைகள் அவ்வளவே. தமிழர்களின் இனவிடு தலைப் போராட்டத்தில் நேரடித் தலையீட்டைச் செலுத்திய நாடாக இந்தியா இருந்த போதிலும், இனப் பிரச்சினைக்குத் தீர்வாக தன்னால் முன்வைக்கப்பட்ட 13ஆவது திருத்தத்தைக்கூட இன்னமும் முற்றாக நடை முறைப்படுத்த அந்த நாட்டுக்குத் திராணியில்லை. ஈழத்தமிழர்களுக்காக தீவிர ஈடுபாட்டுடன் செயற்பட்டால், கொழும்பு சீனாவின் பக்கம் சாய்ந்துவிடலாம் என்ற எண்ணத்திலேயே தன் ஒவ்வொரு நகர்வையும் இந்தியா மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான வெளிவிவகாரக் கொள்கைகள் கொண்ட இந்தியாவிடம், தீவிர நோயாளியான சாந்தனை குறைந்தபட்சம் ஒருநாளேனும் தன் தாயாருடன் இணைந்திருக்க அனுமதிக்காத இந்தியாவிடம் தீர்வு என்ற பெயரில் எதைத்தான் எதிர்பார்த்துவிட முடியும்.

தன் மீதான களங்கத்தை இந்தியா துடைத்தெறிய வேண்டுமாயின், சிறப்பு முகாமுக்குள் எஞ்சியிருக்கும் ரொபேர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் என்பவர்களின் 'உண்மையான' விடுதலைக்கு வழிவகுப்பதுடன், ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு, தன் 'ஆதாம் காலத்து' புராணமான ‘13ஆவது திருத்தத்துக்கும்' அப்பாற்பட்ட நடவடிக்கைகளைக் கைக் கொள்ளவேண்டும். அதை இந்தியாவால் செய்யமுடியாத பட்சத்தில், 'இந்தியா... 'இந்தியா... இந் இந்தியா..' என இந்தியாவின் பின்னால் ஒடிக்கொண்டிருக்க வேண்டிய எந்த அவசியமும் ஈழத்தமிழர்களுக்கும் இல்லை. தன் பிராந்தியநலனைக்கருத்திற்கொண்டு ஈழத்தமிழர்களை இரண்டாம் பட்சமாக்க இந்தியாவால் முடிகின்ற தென்றால், இனத்தின் நலன்களைக் கருத்திற்கொண்டு இந்தியாவை இரண்டாம் பட்சமாக்க ஈழத்தமிழர்களாலும் முடியும். அதில் தவறொன்றும் இல்லை.

(05.03.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

#Editorial

283 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.