வெள்ளையடிப்புக்கான திசைதிருப்பல்
வெள்ளையடிப்புக்கான திசைதிருப்பல்

நாட்டில் அரச தலைவர் தேர்தல் நெருங்கும் நிலையில் ஈஸ்டர் விவகாரம் மீண்டும் பேசுபொருளாக்கப்பட்டிருக்கின்றது. 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர்க் குண்டுத் தாக்குதலுக்கு நீதி இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால் அரசியலுக்குத் தீனி போடும் விடயமாக அது மாற்றப்பட்டுள்ளது. இதில் ஆகப்பிந்திய விடயமாக, தாக்குதல் நடக்கும் போது நாட்டின் அரச தலைவராக இருந்த மைத்திரிபால சிறிசேன கிளப்பிவிட்ட புரளி அமைந்திருக்கின்றது.

‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி யார் என்று எனக்குத் தெரியும். உரிய பாதுகாப்பு வழங்கினால் நீதிமன்றுக்குச் சொல்வேன்' என்று பகிரங்கக் கூட்டத்தில் தெரிவித்தார். அதையடுத்து அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டமையால் அங்கு சென்று வாக்குமூலம் வழங்கினார். அவர் தனது வாக்குமூலத்தில், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமையால் இந்தியாவே இந்தக் குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்தது என்று தெரிவித்துள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் அவரது வாக்குமூலம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் இதுவரை வெளிவரவில்லை.

ஈஸ்டர் தாக்குதலால் அரசியல் ரீதியாக நன்மை அடைந்தவர்கள் ராஜபக்சக்களே. கோத்தாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) உதவியாளராக இருந்த ஹன்ஸீர் ஆசாத் மௌலானா, சனல்-4 ஊடகத்தின் ஆவணப் படத்தின் ஊடாகத் தெரிவித்திருந்தார்.

'இலங்கையின் முன்னாள் அரச தலைவர் கோத்தாபய ராஜபக்ச, இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், இலங்கை புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலே ஆகியோரே ஈஸ்டர் தாக்குதலை பின்னணியில் இருந்து நடத்தினார்' என அவர் அந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டிருந்தார். மக்களிடத்திலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சந்தேகம் ராஜபக்சக்களின் பக்கமே இருக்கின்றது.

அவை எல்லாவற்றையும் இல்லாதொழிக்கவும், அதாவது ராஜபக்சக்களுக்கு வெள்ளையடிக்கவும் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் ராஜபக்சக்களின் ஆசீர்வாதத்துடன் களமிறங்குபவரை வெல்ல வைப்பதற்காகவும் மைத்திரிபால சிறிசேனா, ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை இந்தியாவை நோக்கி திசை திருப்ப முயல்கின்றாரா என்ற சந்தேகம் இயல்பானது. சிங்களவர்கள் மத்தியில் இயல்பாகவே இந்தியாவுக்கு எதிரான மனநிலை உண்டு. எனவே ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா என்ற விடயத்தை இலகுவாகக் கொண்டு சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் மைத்திரி இதைச் சொல்லியிருக்கலாம்.

ஆனால் மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்த நகைச்சுவை நடிகர் வடிவேலுவைப்போல, ஒரு விடயத்தை மைத்திரி மறந்துவிட்டார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நேரத்துடன் - முற்கூட்டியே எச்சரிக்கைத் தகவலை வழங்கிய நாடு இந்தியா. அந்த நாட்டின் உளவுத் துறை மூன்று தடவைகள் இது தொடர்பான எச்சரிக்கையை இலங்கையுடன் பகிர்ந்திருந்தது. அதைக் கண்டும் காணாமலும் கிடப்பில் போட்டிருந்தவர் அப்போதைய அரச தலைவர் மைத்திரிதான்.

அதேபோல இந்த நாட்டில் போர் முடிந்ததிலிருந்து சீனாவுக்கு செங்கம்பளம் விரித்து வரவேற்றவர்களும் ராஜபக்சக்கள்தான். அப்படியிருக்கையில் இந்தக் குண் டுத்தாக்குதலால் அரசியல் லாபத்தை அவர்கள்தான் அனுபவிப்பார்கள் என்று தெரிந்திருந்தும் இதைச் செய்வதற்கு இந்தியா ஒன்றும் அரசியல் இராஜதந்திர அரிச்சுவடி தெரியாத முட்டாள் நாடல்ல.

எனவே மைத்திரிபால சிறிசேனவின் இந்தியாவின் மீதான குற்றச்சாட்டு என்பது, ராஜபக்சக்களுக்கு வெள்ளையடிப்பதற்கான முயற்சிதான்.

(04.04.2024-உதயன் பத்திரிகை)

 

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

272 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.