குதிரையின் குணம் அறிஞ்சுதான் அதுக்கு கடவுள் கொம்பு குடுக்கேல. அப்பிடிக் குடுத்திருந்தால் அதின்ர வேகத்துக்கும், முரட்டுக்குணத்துக்கும் எல்லாரையும் குத்திக் கிழிச்சிருக்கும். குதிரைக்கு மட்டுமில்லை சில கதிரையளுக்கும் கொம்பு முளைச்சால் சிக்கலாயிடும். அப்பிடி ஒரு கதிரையில வந்திருக்கிற ஒரு அம்மணி கொம்பு முளைச்ச மாதிரி நடக்கிறதால அங்க வேலை செய்யவே எல்லாரும் பயப்பிட்டு தலை தெறிக்க ஒருகினமாம். யாழ்ப்பாணத்தில உள்ள ஒப்பீஸ் ஒண்டுக்கு அவாதான் பொறுப்பா இருக்கிறா. ஒரு சட்டம் இருந்தால் அதில ஒரு இஞ்சியும் மீறக்கூடாது எண்டதில ஆள் கடும்பிடி. வேலையில நல்ல கெட்டித்தனம் உள்ள ஆள். ஆனால் இவ்வளவு இருந்தும் நாங்கள் மனிசரோட வேலை செய்யிறம் எண்ட ஒரு எண்ணம் இருக்கவேணும் எல்லோ. அது மட்டும் அவாட்ட மிஸ்ஸிங். எல்லாரையும் மிஷின் மாதிரித்தான் பாப்பா. எவ்வளவுத்துக்கு அவையிட்ட வேலை வாங்க முடியுமோ அவ்வளவுக்கு வாங்குவா. வேலைக்கு வந்தவையிட்ட உச்சபட்ச வேலையை வாங்கிறதும் ஒரு நிர்வாகத் திறமைதான். ஆனால் அதுக்காக மனச்சாட்சியைக் கழற்றி வைச்சமாதிரியான காரியங்களும் செய்யக்கூடாதெல்லோ.
இவான்ர சர்வாதிகார ஆட்சியில இருந்து எப்பிடித் தப்பலாம் எண்டுதான் அங்க வேலை செய்யிற எல்லாரும் யோசனையாம். இப்பிடிப்பட்ட நிலையில அங்க ஒராள் வேலைக்கு போயிருக்கிறா. போய் ரண்டு, மூண்டு நாளிலேயே அவாக்கு வேலையே வெறுத்துப் போட்டுதாம்.
பொதுவா எல்லா ஒப்பீஸிலையும் 'லஞ்ச் நேரத்தில எல்லாரும் மோட்டர் சைக்கிளில வெளியில வெளிக்கிட்டிடுவினம். அப்பிடியே போய், ஸ்கூல் முடிஞ்சதும் பிள்ளையளை ஏத்தி வீட்ட விட்டிட்டுத்தான் வருவினம். உண்மையில ரூல்ஸ்படி, அப்பிடி உத்தியோகத்தர்மார் வெளியில போகக் கூடாது தான். ஆனால் மனிதாபிமானத்தோட எல்லா டிப்பார்ட் மெண்ட் பெரியாக்களும், இப்பிடி உத்தியோகத்தர்மார் 'லஞ்ச் ரைம்' வெளியால போய் பிள்ளையளை ஏத்தி இறக்குறதுக்கு ஒண்டும் சொல்லுறேல.
ஆனால் 'சட்டம் எண்டா சட்டம், ரூல்ஸ் எண்டா ரூல்ஸ்' எண்டு கடுமையா நிக்கிற இந்த ஒப்பீஸர், புதிசா தங்கட ஒப்பீஸுக்கு வந்தவானிட்ட 'லஞ்ச் ரைம் இஞ்ச இருந்து தான் சாப்பிடவேணும். வெளியில போய்வர ஏலாது எண்டு மறிச்சுப் போட்டா. அங்க ஸ்கூலில தன்னை ஏத்திக்கொண்டு போக அம்மா வருவா எண்டு பிள்ளை காவல் இருந்துட்டு, பிறகு தன்ரபாட்டில நடந்து போய், பாதை மாறி ஒருவழியா வீட்ட போயிருக்கு. ஒருவேளை அந்தப்பிள்ளை அப்பிடிப் போகேக்க ஏதும் நடந்திருந்தால் ஆர் பதில் சொல்லுவினம்?அதுக்குப் பிறகு எல்லா வேலையிலையும் நொட்டை சொல்லுறதும், எரிஞ்சு விழுகிறதுமா இருந்து இருக்கிறா. பொறுத்துப் பார்த்துப் பார்த்து ஏலாக்கட்டத்தில, இதைப்பற்றி மேலிடத்துக்கு அந்த உத்தியோகத்தர் முறைப்பாடு செய்து என்னை எவ்வளவு தூரத்தில வேலைக்குப் போட்டாலும் பரவாயில்லை. இஞ்சயிருந்து மட்டும் வெளியால எடுத்து விடுங்கோ எண்டு கடிதம் போட்டிருக்கிறாவாம். ஒரு வேளை அந்தக்கடிதத்துக்கு இரங்கி அவாவுக்கு இடமாற்றம் குடுத்தாலும். புதுசா அந்த ஒப்பீஸுக்குப் போறவை என்ன பாடுபடப் போயினமோ? ஷ்ஷ்ப்பா..... அதை நினைக்க இப்பவே கண்ணைக்கட்டுதே!
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.