'மந்திரம் கால் மதி முக்கால்' எண்டு சொல்லுவினம். மஜிக் மாதிரி ஏமாத்து வித்தை செய்யிற ஆக்கள் இப்பிடி தங்கட மூளையைப் பாவிச்சு தாங்கள் செய்யிற தந்திரங்களை மந்திரமெண்டு பாக்கிற ஆக்களை நம்ப வைச்சிடுவினம். அதுக்குப் பிறகு அவர் செய்யிற எல்லா வித்தையையும் அவவையின்ர மனம் உண்மையெண்டு நம்பி, வாயைத் திறந்து ஆவெண்டு பாக்க வைச்சிடும். இந்தப் பழமொழி மந்திரத்துக்கு மட்டுமில்லை. மருத்துவத்துக்கும் பொருந்தும். மருந்து கால், மதி முக்கால் எண்டு மாத்திச் சொல்லலாம். வருத்தம் வந்தவைக்கு மருந்தைவிட, அந்த வருத்தம் மாறிடும் எண்ட நம்பிக்கை வந்தாலே காணும், அவைக்கு அந்த வருத்தம் கெதியில மாறிடும். ஆனால் இப்ப அப்பிடியெல்லாம் கெதியா வருத்தம் மாறினால் உழைப்பில்லையே. வடக்கில உள்ள பிரைவேட் ஆஸ்பத்திரியள் எல்லாமே காலில சின்னமுள்ளுக் குத்தினால்கூட, ரண்டு நாள் வார்ட்டில நிக்க வைச்சு, ஒப்பிரேசன் பண்ணி அந்த முள்ளை எடுக்கிற அளவுக்குத்தான் நிலைமை இருக்கு. இதில டாக்குத்தர்மாரில பிழை இல்லை. அவை இதுக்கு என்ன செய்ய ஏலும்? ஆஸ்பத்திரி நிர்வாகம் சொல்லுறதைத்தான் அவை செய்யமுடியும்.
மனச்சாட்சியுள்ள கன டாக்குத்தர்மார் இப்பிடியான ஆஸ்பத்திரியளின்ர சுத்துமாத்தை சாடைமாடையா வருத்தக்காரரிட்ட சொல்லுறதும் உண்டு. அதால சிலர் அங்கையிருந்து பெரியாஸ்பத்திரிக்குப் போய் உடனேயே மருந்தெடுத்து அந்த வருத்தத்தை மாத்தின கதையெல்லாம் இருக்கு. சிலநேர்ஸ்மார் வருத்தக்காரரோட எரிஞ்சு விழுந்தாலும், பெரும்பாலும் டாக்குத்தர்மார் அப்பிடிச் செய்யிறேலை. பெரியாஸ்பத்திரி எண்டால் கொஞ்சம் அவசரமாக் கதை கேப்பினமே தவிர, மற்றப்படி நோயாளியோட அவையள் பாயிறேலை . ஆனாலும் என்னதான் அவசரத்தன மெண்டாலும், வருத்தக்காரருக்குக் கிட்டப்போய். தலையைக் குனிஞ்சு அவை சொல்லிறதை அக்கறையாக் கேப்பினம். 'அதெல்லாம் கெதியா மாறிரும். பயப்பிடாதையுங்கோ' எண்டு முதுகில தட்டிச்சொல்லிப்போட்டு போவினம். இப்பிடி நோயாளி சொல்லுறதை காதுகுடுத்துக் கேக்கிறதும், அவைக்கு கிட்டப்போய் ஆதரவா அவையின்ர வருத்தத்தை அறியிறதும் கூட ஒருவகையான சிகிச்சைதான்.
ஆனால் வருத்தக்காரைக் கண்டாலே நாலைஞ்சு மைலுக்கு அங்கால நிக்கிற டாக்குத்தர்மாரும் இருக்கினம் தான். வடக்கு மாகாணத்தில ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியில இருக்கிற டாக்குத்தர் இப்பிடி தாங்கள் வருத்தம் எண்டு போனால் பத்துப் பதினைஞ்சு அடி தள்ளி நிண்டுதான் 'என்ன வருத்தம்?' எண்டு சோதிக்கிறவா எண்டு சில நோயாளியள் சொல்லுகினம். அதுக்கு அந்த டாக்குத்தர் சொல்ற விளக்கம் தான் பெரும் பகிடி. 'கிட்ட நிண்டு வருத்தம் பார்த்தால் உங்கட வருத்தம் எனக்கும் தொத்திப்போடும். அதுதான் இப்பிடி இடைவெளி' எண்டு சொல்லுறாவாம். இதால அவாவுக்கு 'றிமோட் டாக்குத்தர்' எண்டு ஆக்கள் பேரும் வைச்சிருக்கினமாம். கொரோனாக்குத்தான் கிட்டபோகக்கூடாது எண்டு சொன்னவை. ஆனால் கொரோனா வரேக்ககூட துணிஞ்சு நிண்டு, நோயாளியளை கிட்டப்போய் பராமரிச்ச டாக்குத்தர்மாரும் இருக்கினம் தானே. இப்ப கொரோனாவே எங்களைக் கண்டு வெருண்டடிச்சு ஓடுற காலத்தில இந்த டாக்குத்தர் மட்டும் இன்னும் கொரோனா நினைப்பிலேயே தூர நிண்டு வருத்தத்தைச் சோதிக்கிறா. ஆரும் அவாக்கு ஒரு ரெலஸ்கோப் (தொலைநோக்குக்கண்ணாடி) வாங்கிக் குடுத்தால் இன்னும் எட்டவா போய் அவா வருத்தம் பாக்க வசதியா இருக்கும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.