“வாழ்க்கை இருட்டாகத் தெரிகிறதா? அச்சம் வேண்டாம்.
நீங்கள் புதைக்கப் படவில்லை.
விதைக்கப் பட்டிருக்கிறீர்கள்”
தற்கொலை மனிதனுடன் மட்டும் தொடர்புடைய ஒன்றாகையால் மனித வாழ்வு குறித்து அக்கறை செலுத்தும் அனைத்து நெறிகளும் இவ் எண்ணக்கரு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கின்றன. “தன்னைத் தானே கொள்ளுதல்” தற்கொலை என அழைக்கப்படுகின்றது. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இது இடம்பெற்று வருகின்றது.
மனிதன் மனவெழுச்சி அழுத்தங்களால் அழுந்திக் கொள்கின்ற போது அதன் வெளிப்பாடாக காட்டிக் கொள்கின்ற ஒன்றே இதுவாகும். இது உறுதியான துன்பியல் நிலையும் மாற்ற முடியாத தனிப்பட்ட ஒழுங்கீனத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாய் அமையும். ஒருவன் தனது வாழ்க்கையை வெறுக்கும் போதும் அந்த வாழ்வானது அர்த்தமற்றது என உணரும் போதும் தற்கொலை குறித்த முடிவு மரணத்தில் போய் முடிகின்ற போது அவன் கதையும் முடிந்து விடுகின்றது. அவன் கவலையும் முடிந்து விடுகின்றது.
முன்னோக்கி செல்கின்ற வாழ்க்கையை சற்று பின்னோக்கி பார்க்கும் போது எங்களுக்குத் தெரிந்த ஒருவரை தற்கொலையால் இழந்திருப்போம். பத்திரிகைகளிலோ செய்திகளிலோ தற்கொலை செய்த செய்திகளை கேட்டு வருந்தியிருப்போம். இதனை தடுக்க முடியுமா? எதனால் இந்த துயரச் சம்பவம் இடம்பெறுகின்றது என்பது குறித்து ஆராய்வதில்லை. ஒரு குறித்த காரணத்தால் இது ஏற்படுவதாக தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. ஒவ்வொரு தற்கொலையின் பின்னனியிலும் பல்வேறு உளவியல், உயிரியல் மற்றும் சமூக காரணிகள் உண்டு.
எவ்வாறாயினும் தற்கொலைக்கான காரணத்தினை இலகுவாக வரை விலக்கணப்படுத்த முடியாது. எனினும் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் , மன அழுத்தம் , அலுவலகத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் , காதல் தோல்வி , உறவுகளின் இறப்பு , பிரிவு , பரீட்சையில் தோல்வி , மதுப் பழக்கம் போன்ற காரணங்களால் இவ்வெண்ணம் தோன்றுகின்றது. ஆனால் இதிலிருந்து விடுபட வேண்டும். நமது மூதாதையர்கள் பெரிய சுனாமி அலையைக் கூட எதிர்த்து நின்று ஜெயித்தார்கள். அப்படி இருக்கையில் ஒரு சிறிய அலையே நமக்கு ஏற்படும் பிரச்சனை. இது ஏன் நம்மை அடித்துச் செல்ல இடமளிக்க வேண்டும்? சற்று சிந்தியுங்கள்.
நவீன உலகில் இருக்கும் நாம் தொலைபேசியையும் கணணியையும் மட்டுமே வேண்டிய நண்பராக பார்க்கின்றோம். சந்தோசமான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நாம் நம்முடைய துக்கங்களையும் ஏமாற்றங்களையும் பதிவிட முடிகின்றதா? நான் அழுதால் சாய்வதற்குத் தோலும் இல்லை. என் பிரச்சனையை கேட்பதற்கு செவியும் இல்லை.
தன் குழந்தைகளுக்கு இல்லை என்ற சொல்லே தெரியாமல் பார்த்து பார்த்து வளர்க்கும் பெற்றோர் அவர்களுக்கு சமூகத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய தைரியத்தை பழக்க மறக்கிறார்கள். தகாத உறவுமுறைகள் , போதைப்பழக்கம், வேலை நிறுத்தம் என சமூகத்தை அச்சுறுத்தும் எல்லா விடயங்களும் இன்று தலைவிரித்து ஆடுகின்றமையால் தற்கொலை எண்ணமும் நம்மை விடாமல் துரத்துகின்றது. உயிரியல் உளவியல் மற்றும் சமூகக் காரணிகள் ஒன்றோடொன்று இணையும் போது ஒரு நபர் தற்கொலை செய்வதற்கான எண்ணம் பன்மடங்காக அதிகரிக்கின்றது. தற்கொலை குறித்து நாம் பார்க்கும் பார்வை தவறாக புரிய வைக்கின்றது. பலவீனமானவர்கள் மட்டுமே இவ் உணர்வால் தூண்டப்படுகிறார்கள் என எண்ணாதீர்கள்.
தன்னை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் தோன்றும் நபர் யாரோ ஒருவரிடம் பகிர்ந்து கொள்வார். ஆனால் அது நிராகரிக்கப் படுகின்ற போது நம்பிக்கை இழந்து அதனை செய்யத் துணிகின்றார். “எனக்கு வாழப் பிடிக்கவில்லை. நான் பாரமாகி விட்டேன். நான் இறப்பதே மேல்”; என உங்களிடம் யாரேனும் சொன்னால் அது தானாக சரியாகி விடும் என அதை பொருட்படுத்தாமல் விட்டு விடாதீர்கள். அவர்களுடைய மனச்சோர்வின் வெளிப்பாடாகவே அவ்வார்த்தைகள் இருக்கும். ஒருவரின் உணர்வை அறிய வெளிப்படையாக பேசுதல் அவசியம். அவருக்கு ஆறுதலாக கதைக்கும் போது நம்பிக்கை பிறந்து விடும். சரியான விழிப்புணர்வுச் சிகிச்சை மனச்சோர்வைiயும் தற்கொலை எண்ணத்தையும் மாற்றும்.
பிளேட்டோ தற்கொலை செய்யும் உரிமை மனித உயிரிக்கு இல்லை என்றும் மாறாக யாரேனும் தற்கொலை செய்து கொண்டால் அவனுக்கு இறப்பின் பின்னான மரியாதை செலுத்துதல், கிரியைகள் எதுவும் இடம்பெறக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றார். மேலும் அத்தகைய ஒருவன் உலகில் வாழ்ந்தானா என்பதற்கான சான்றுகள் அனைத்தையும் அழித்துவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரிஸ்ரோட்டில் “மனிதன் இறைமையுடைய ஓர் அரசின் ஊழியன். அத்தகையவன் சுயவிருப்பின் அடிப்படையில் தற்கொலை செய்து கொள்வது அரச விரோத செயல்” என்றார். தற்கொலைச் செயல் இறைவனுக்கும் இயற்கை விதிகளுக்கும் எதிராக செய்யப்பட்டு வரும் பாவச் செயல் என மத்திய கால மெய்யியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒழுக்க நியமங்கள் எதுவுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாத ஒரு செயலே தற்கொலை. இதனை மேற்கொள்வதன் மூலம் தன்னை பாதுகாத்துக் கொள்ளல் என்ற கட்டுப்பாட்டில் இருந்து ஒருவன் தவறி விடுகின்றான். எமக்கு தரப்பட்ட உடம்பே எமது உயிரினை அல்லது வாழ்வினை கட்டுக்கு உட்படுத்தியுள்ளது. எனவே உடம்பை அழித்தல் என்பது வாழும் சதந்திரத்திற்கும் உயிரிக்கும் தீங்கு செய்யும் ஒரு செயலாகும். ஆதலால் இதனை ஒழுக்க அடிப்படையில் ஏற்றுக்கொள்ளத்தக்க செயலல்ல.
தாராண்மை வாத சிந்தனையாளர்கள் தனிமனித வாழ்வானது அத் தனிநபருக்கு மட்டுமே உரிமமானது என்றும் பிறர் அத் தனியனின் வாழ்க்கைக்குள் நுழைந்து தமது சொந்த கருத்துக்களை திணிக்க கூடாது எனவும் வலியுறுத்துகின்றனர். ஒருவன் மாறாத உடல் நோயினால் மன நோயினால் அல்லலுறும் போது அதற்கான தீர்வு மருத்துவத்தில் இல்லை என்ற பின் தற்துணிவின் அடிப்படையில் தற்கொலை செய்வதற்கான முடிவினை எடுக்கலாம். அவனது தீர்மானம் மதிக்கப்பட வேண்டியது. அங்கீகரிக்கப்பட வேண்டியது. பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனிதனது வாழ்வின் இடைப்பட்ட காலத்தில் அவன் தனக்கென தானாய் முடிவெடுக்கும் சுயாதீனம் உடையவன். சாவதற்கான முடிவினை எடுப்பது அவனது அடிப்படை உரிமையாகும். எனக் குறிப்பிடுகின்றனர். எது எவ்வாறாயினும்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவன் தற்கொலையாளன் அல்ல. அவனை அந்நிலமைக்கு உள்ளாக்கியது சமூகமே. அழிவுகள் நிறைந்த உலகில் தனியொருவன் தாங்க முடியாத தவிப்பில் தற்கொலை செய்து கொள்ளுதல் தாக்கமானதோர் விடயமல்ல. மேலும் ஆராயப்பட வேண்டிய ஒரு எண்ணக்கருவாகவே உள்ளது எனலாம். மனச்சோர்வு மாற்றக் கூடிய ஒன்று. உங்களது நண்பரோ உறவினரோ எதிர்காலத்தில் நம்பிக்கை இழந்து போகின்றார் என்றார் அவர்களை விட்டு விடாதீர்கள். என்ன செய்வதென்று தெரியாமல் தவறான முடிவெடுக்கும் பலருக்கு உங்களது ஆறுதலான வார்த்தையும் சரியான வழிகாட்டலும் முக்கியமானது. ஒருவரின் புன்னகை நமக்கு ஏற்படுத்தும் மனநிறைவை எவராலும் விபரிக்க முடியாது. ஆகவே மற்றவர்களது மகிழ்ச்சிக்கு துணையாக நில்லுங்கள் ஆனால் அடுத்தவர்களை காயப்படுத்தி கண்ணீரில் சுகம் காணும் பழக்கத்தை மறந்து விழித்திடுவோம் உறவுகளின் விடிவுக்காக……………….
தனிஸ்ரா. பாலகிருஸ்ணன்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.