வெடுக்குநாறிமலையில், சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸாரால் மிருகத்தனமாகக் கைதுசெய்யப்பட்ட எண்மர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்து, அவர்களை விடுவித்திருக்கிறது வவுனியா நீதிமன்றம். நிரூபிக்கமுடியாத குற்றச்சாட்டுக்காகத்தான் அந்த எண்மரும் மிருகத்தனமாக, அரை நிர்வாணமாக்கப்பட்டு அதிகாரத்தின் இரும்புக்கரங்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு நில்லாமல், ஏதோ அதிபயங்கரக் குற்றவாளிகள் போல அவர்கள் கைவிலங்கு கழற்றப்படாமலேயே மருத்துவமனையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். நாட்டில் கொடூரக்கொலைகள் புரிந்தவர்களும், போதைப்பொருள்களைக் கடத்தியவர்களும், கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தவர்களும், காணிகளை அபகரித்தவர்களும் சுதந்திரப்பறவைகளாக உலாவருகையில், ஆதிசிவனைமன முருக வழிபட்டார்கள் என்ற காரணத்துக்காக பொய்க் குற்றச்சாட்டுச்சுமத்தப்பட்டு கைது செய்வதும், வாரக்கணக்கில் சிறையிடுவதும் தொடர்ந்தபடிதான் இருக்கின்றது.
வெடுக்குநாறிமலையில் சிங்கள- பௌத்த பேரினவாதத்தின் ஏவுதலால் பொலிஸாரும், தொல்லியல் திணைக்களத்தினரும் வெறியாட்டம் ஆடுவது இப்போது தான் என்றில்லை. அந்தமலையில் புத்தரைக் குடிவைக்க அவர்கள் திட்டமிட்டநாள்முதலே அவர்களின் காய்நகர்த் தல்களும், தடைகளும், கைதுகளும், கண்காணிப்புகளும் ஆரம்பித்துவிட்டன. தனிநாட்டுக்காகப் போராடிய இனத்தை இப்போது தங்களின் மத வழிபாட்டுக்காகக் கூடப் போராடவேண்டிய நிர்ப்பந்தத்தை சிங்கள- பௌத்த பேரினவாதம் வெடுக்குநாறிமலை யில் மட்டுமல்லாது, குருந்தூர்மலை, முல்லைத்தீவு நீராவியடி, கன்னியாய், உருத்திரபுரம் சிவன்கோயில், தையிட்டி என இன்னோரன்ன இடங்களில் வலிந்து ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக தமிழ்- சிங்கள எல்லையோரக் கிராமங்களில் உள்ள மலைகள், மரங்கள், கோயில்கள் என்பனவே புத்தர் சிலையை நிறுவுவதற்குத் தெரிவுசெய்யப்பட்டு, அங்கு முன்னொரு காலத்தில் விகாரை இருந்ததாக புனைவொன்று பரப்பப்பட்டு, அதற்குத் தொல்லியல் திணைக்களத்தின் ஆதரவும் பெறப்பட்டு, பின்னர் பொலிஸ் பிடிக்குள் கொண்டு வரப்படும். சிங்கள- பௌத்த பேரினவாத வேலிக்கு சாட்சி சொல்லும் ஓணான்களான இலங் கைத் தொல்லியல் சட்டங்கள் அபாயகரமானவை. தொல்லியல் சின்னமொன்றைச் சேதப்படுத்தினால் அல்லது கவர்ந்தால் அது பிணையில் கூட வரமுடியாதளவுக்குப் பாரதூரமான குற்றமாகக் கருதப்படும். அதனை வைத்துத்தான் தொல்லியல் திணைக்களமும், பொலிஸ் திணைக்களமும், சிங்கள - பௌத்த பேரினவாதமும் முக்கூட்டணி அமைத்து தமிழ் மக்களை இம்சித்து வருகின்றன.
வெடுக்குநாறிமலையில்கூட, தொல்லியல் சின்னத்தைச் சிதைத்து ஏணிப்படி அமைத்தார்கள், அடுப்பு மூட்டினார்கள் என்று சிறுபிள்ளைத்தனமான குற்றச் சாட்டுகளைச் சுமத்தி, கைது செய்து எப்படியாவது அந்த மலைக்கு மக்களை வரவிடாமல் தடுப்பதிலேயே பொலிஸாரும், தொல்லியல் திணைக்களத்தினரும் குறியாக இருக்கின்றனர். ஆனால் இதே வெடுக்குநாறிமலையில் அமைக்கப்பட்டிருந்த ஆதிசிவன் உள்ளிட்ட விக்கிரகங்களைஅடித்துடைத்தவர்களை இதுவரையும் கண்டுபிடிக்க முடியாமல் இதே தொல்லியல் திணைக்களமும், பொலிஸாரும் கையாலாகாத்தனத்தோடு இருக்கின்றனர். சைவத்துக்கும், ஆதிசிவனுக்கும் இடையூறு செய்வோரை கண்டும்காணாமல் இருக்கும் பொலிஸாருக்கும் தொல்லியல் துறையினருக்கும், தமிழ் மக்கள் சிவனை வழிபடச் செல்லும் சந்தர்ப்பங்களில் மட்டும் ஆயிரம் மடங்கு பலமும், தொல்லியல் மீதான திடீர்ப்பாசமும் வந்துவிடு வது புத்தரின் அனுக்கிரகமாகத்தான் இருக்கவேண்டும். இப்போது பொலிஸாரின் பொய்வழக்கில் இருந்து எண்மரும் விடுதலையாகிவிட்டனர். ஆனாலும், இந்தப் பதினொரு நாள்களும் அவர்கள் சிறையிலிருந்ததால் ஏற்பட்ட உடல், உள நெருக்கீடுகளுக்கு என்னநிவாரணம்? இனியும் இவ்வாறான பொய்வழக்குகளைப் போட்டு தமிழ் மக்களை வலிந்து சிறைக்குள் தள்ளும் போக்கை தொடரவிடக்கூடாது. அதற்கு தமிழ் மக்கள் மிகப்பெரும் அழுத்தங்களை அரசாங்கத்துக்குத் தொடர்ச்சியாக வழங்கவேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி.க்கள் நேற்று நடத்திய போராட்டம் இதற்கான ஆரம்பப்புள்ளியாக அமையட்டும்.
(20.03.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
kan164
isd4cq
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.