புதியவன்
இலங்கைச் சிறையிலுள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, சனிக்கிழமை முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மீனவர்களைப் படகுடன் விடுதலை செய்யாவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடித்துத் துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க வந்தபோது இலங்கைக் கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஐந்து படகையும் அதிலிருந்த 32 மீனவர்களும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மீன்பிடிக்க வந்து கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள இழுவைமடிப் படகு ஓட்டுநர்கள் ஐந்து பேர் உட்பட 37 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், அடுத்த மாதம் 8 ஆம் திகதி இராமேஸ்வரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைத்து போராட்டம் நடத்தவுள்ளனர்.
அத்தோடு, வரும் மக்களவை( நாடாளுமன்ற) தேர்தலுக்குள் மீனவர்கள், படகுடன் விடுதலை செய்யப்படாவிட்டால் இராமேஸ்வரம் மீனவர்கள் வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகத் தீர்மானித்துள்ளனர்.
வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 800 இற்கும் மேற்பட்ட இழுவைமடிப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் நேரடியாகவும் 50 ஆயிரம் மீன்பிடி சார் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.