வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் பல தடவைகள் ஆசிரியர் தலையங்கத்தில் 'உதயன்' சுட்டிக்காட்டியிருந்தான்.
கடந்த காலங்களில் இந்தத் தீவில் ஓடிய குருதி ஆறுக்கும் பொலிஸாரின் இத்தகைய பக்கச்சார்பான செயற்பாடுகளும் வழிகோலியிருந்தன. அவர்கள் அதிலிருந்து இப்போதும் விலகவில்லை. சிங்கள - பௌத்த பேரினவாத சிந்தனையை நடைமுறைப்படுத்தும் திணைக்களமாகவே பொலிஸார் இருக்கின்றனர். இங்கே அவர்கள் மாத்திரமல்ல அந்தத் திணைக்களத்துக்குப் பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் கூட அதே சிந்தனையில் ஊறித் திளைத்தவராகத்தான் இருக்கின்றார்.
இந்துக் கோயில்கள் எவையும் இல்லை. அது அநுராத புரத்துக்கால பௌத்த மரபுரிமைக்குரிய இடம். அங்கு 2023 ஆம் ஆண்டு வைக்கப்பட்ட சிவலிங்கத்தாலேதான் பிரச்சினை, பௌத்த மரபுரிமைக்குரிய இடத்துக்குள் பிரவேசித்தால் கைது செய்யப்படுவார்கள் என்று நாடாளு மன்றத்தில் வைத்து முழங்கியிருக்கின்றார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.
இவற்றுக்கு ஒரு படி மேலே சென்ற சரத் வீரசேகர, அங்கிருந்த பௌத்த சின்னங்கள் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானவை. அவற்றை இடித்தழித்துவிட்டே அங்கு சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கின்றார்.
1997 ஆம் ஆண்டு 'ஜெயசிக்குறு' சமர் காரணமாக வெடுக்குநாறிமலையைச் சூழவுள்ள கிராமமக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர். 2002ஆம் ஆண்டு மீளக்குடியமர்ந் ததிலிருந்து வழிபட்டிருக்கின்றனர். 2006 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலையைத் தொடர்ந்து அங்கு சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தாலும், வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரருக்குச் செல்லும் பாதையில் இராணுவமுகாம் இருந்தமையால் மக்கள் செல்ல முடியவில்லை.
நல்லாட்சிக் காலத்தில் அது அகற்றப்பட்ட பின்னர் மக்கள் அங்கு சென்று மீண்டும் வழிபடத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு அங்கு மலைக்குச் செல்வதற்கான ஏணி அமைக்கப்பட்டபோதே தொல்பொருள் திணைக்களம் தலையிட்டு பிரச்சினைகளை ஆரம்பித்து வைத்தது. கடந்த ஆண்டு ஆதிலிங்கேஸ்வரர் ஆலயச் சிலைகள் எல்லாம் அடித்துடைக்கப்பட்டிருந்தன. இதுவரையில் அவற்றைச் செய்தவர்கள் யார் என்பது கண்டறியப்படவுமில்லை, கைதுசெய்யப்படவுமில்லை. தொல்பொருள் இடம் என்று தொல்பொருள் திணைக்களம் கூறும் ஒரு பிரதேசத்தில் வழிபாட்டிடங்களை அழித்தவர்களைக் கைது செய்யாத பொலிஸ் திணைக்களமும் அதற்குப் பொறுப்பான அமைச்சரும் தான், இடித்தழிக்கப்பட்ட சிவலிங்கத்தை மீள வைத்ததிலிருந்து பிரச்சினை ஆரம்பமானது என்று கூறுகின்றனர்.
அமைச்சர் டிரான் அலஸ் சொல்லவரும் செய்தி தெளிவானது. "பௌத்த-சிங்கள மரபுரிமைக்கு ஆபத்து ஏற்பட் டால் மாத்திரமே நாம் நடவடிக்கை எடுப்போம். ஏனைய மதத்தவரின் தொன்மைக்குச் சேதம் ஏற்படுத்தினால் அது தொடர்பில் கவலைப்படமாட்டோம். அதைவிட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்த விக்கிரகங்கள் உடைக்கப்பட்டது சரியானதே" என்பதைப் போலவே அமைச்சர் டிரானின் கருத்து அமைந்திருக்கின்றது. அதை மீள வைத்ததில் தான் தவறு என்கிறார். இவற்றுக்கு மேலாக, பௌத்த மரபுரிமை இடங்களுக்குள் அத்துமீறி நுழைந்தால் கைதாகு வீர்கள் என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கின்றார்.
எனவே வெடுக்குநாறிமலையில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்ட துடன் இந்த விவகாரம் முடிந்து விடப்போவதில்லை. அங்கு வழிபாட்டுக்குச் சென்றால் மீண்டும் கைது செய்வோம் என்ற எச்சரிக்கையை அவர் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார். நீதிமன்றங்கள் வழங்கும் கட்டளைகளைக்கூட மதிக்காத வகையில் உரையாற்றியிருக்கின்றார் அமைச்சர் டிரான். இந்த லட்சணத்தில்தான் ஜனாதிபதி ரணில், வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி அன்று நடந்த விடயம் தொடர்பான தனியான விசாரணைக் குழு அமைக்க இணங்கியிருக்கின்றார் என்று அமைச்சர் டக்ளஸ் பெருமையாக அறிக்கையிட்டிருந்தார். பௌத்த சிங்கள பேரினவாதம் என்ற சிந்தனையோட்டத்திலிருந்து வெளியே வராத வரையில் எதுவும் நடக்கப்போவதில்லை.
(23.03.2024 உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன்#eelamnews #Uthayanpaper #sudaroli #sanjeevi #uthayannews #jaffnauthayan
91p2d3
80kdfj
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.