புதியவன்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகத்துக்கு எதிராக அதன் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தவிர்ந்த ஏனைய எதிராளிகள் அறுவரும், தங்களின் ஆட்சேபனைகளை எழுத்தில் சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் கோரியமையை அடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கி அந்தத் திகதிக்கு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
திருகோணமலை மாவட்ட நீதிபதி மா.கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஏழு எதிராளிகளில் ஒருவரான சுமந்திரன் தனது தரப்பு ஆட்சேபனைச் சமர்ப்பணங்களை எழுத்தில் சமர்ப்பித்தார்.
ஏனைய எதிராளிகள் தமது ஆட்சேபனை சமர்ப்பணங்களைச் சமர்ப்பிக்காத நிலையில் தாங்களும் அதனை முன்வைப்பதற்குக் கால அவகாசம் கோரினர்.
அதற்கு அவகாசம் வழங்கி வழக்கை 24 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிராளியான சுமந்திரன் முதல் தடவையாக நீதிமன்றில் முன்னிலையானார். அவர் தமக்காகத் தாமே சமர்ப்பணம் செய்தார்.
கடந்த 17 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழு, கட்சியின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தும்படி தம்மை வழிப்படுத்தி இருப்பதால் அதன் அடிப்படையில் தான் இந்த ஆட்சேபனைச் சமர்ப்பணங்களை முன்வைப்பதாக சுமந்திரன் தெரிவித்தார்.
வழக்காளி கட்சி மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களையும் தவறுகளையும் அப்படியே ஏற்றுக்கொள்வது கட்சியின் முடிவல்ல என்பதையும், கட்சியின் உண்மையான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி அரசியல் குழு தன்னை வழிப்படுத்தி இருக்கின்றது என்றும் சுமந்திரன் நீதிமன்றத்தில் சொன்னார்.
வழக்காளியின் குற்றச்சாட்டுக்களையோ, அவர் கோரிய நிவாரணங்களையோ தம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட சுமந்திரன், வழக்கை விரைந்து முடிப்பதற்காக எல்லாவற்றையும் தவறு என்று ஏற்றுக்கொள்ளும் சில எதிராளிகளின் நிலைப்பாடு கட்சியினுடைய நிலைப்பாடு அல்ல என்றும், அதனால் தான் பல விடயங்களைத் தெளிவுபடுத்தித் தான் ஆட்சேபனைச் சமர்ப்பணமாக முன்வைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
இதேநேரம், வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான செல்லையா இரத்தினவடிவேல் தனது சட்டத்தரணி ஊடாக விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தார்.
இந்த வழக்கில் கட்சியினர் நேரடியாக இணைய முடியும் என்ற நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைய தம்மையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளும்படி அவர் கோரினார்.
கட்சி சார்ந்த பொது நலன் வழக்கு என்பதால் கட்சி உறுப்பினர் ஒருவர் வழக்கில் இணைவதைத் தாம் ஆட்சேபிக்கவில்லை என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.
வழக்காளியும், ஏனைய எதிராளிகளும் இந்த உறுப்பினரின் விண்ணப்பம் தொடர்பில் ஆட்சேபனை ஏதும் தங்களுக்கு இருக்குமாயின் அதனைத் தெரி விப்பதற்கு கால அவகாசம் கோரியதனால் அதற்கும் 24 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
நீதிமன்றுக்கு வெளியில் நேற்றைய அமர்வு குறித்து கருத்து வெளியிட்ட சுமந்திரன் ,
'என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கு மிக விரைவில் முடிவுறுத்தப்பட வேண்டும் என்பதற்காக எனது முதல் பிரசன்னத்திலேயே நான் ஆட்சேபனைப் பத்திரங்களைத் தயாராக எடுத்து வந்து அணைத்து இருக்கின்றேன். மற்றைய தரப்பினரின் ஆட்சேபனைக்காகத்தான் வழக்கு ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டிருக்கின்றது.' - என்றார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்றைய வழக்கு விசாரணையைத் தொடர்ந்து திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் எம்.ஏ.சுமந்திரன், சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.