''கிழக்கின் இருப்பு கேள்விக்குறி''
''கிழக்கின் இருப்பு கேள்விக்குறி''

எழிலன்

கல்முனை வடக்கு பிரதேசமானது பறிபோகுமாயின் கிழக்கின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.அம்பாறை தமிழ் தேச வரைபடத்திலிருந்து நீக்கப்படும்.ஆகவே மக்கள் சிந்திக்க வேண்டும் என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 14 ஆவது  நாளாக இன்று கவனவீர்ப்புப் பேரணியுடன் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அங்கு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சுகாஷ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 34 வருடங்களாக ஒரு சுயாதீனமான பிரதேச செயலகமாக இயங்கி வருகின்றது.

ஆனால், இங்கு ஒரு தனியான பிரதேச செயலாளர் என்று ஒருவர் இல்லை. இது இலங்கையின் ஆச்சரியங்களில் ஒன்று. கணக்காளர் என்ற ஒருவர் இல்லை.

கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் எதேச்சையான அதிகாரத்தினுள் சட்டவிரோத உத்தரவுக்கு கட்டுப்பட்டுத் தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் செயற்பட்டு கொண்டிருக்கின்றது. 

இது அரச எதேச்சதிகாரமாகும். இது அரச பயங்கரவாதம்.

1993.07.23 ஆம் திகதி இலங்கை அமைச்சரவையில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கல்முனை வடக்கு பிரதேச செயலகமானது ஒரு சுயாதீனமாக இயங்குகின்ற பிரதேச செயலகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், அமைச்சரவை தீர்மானத்தை மீறி இந்த அரசானது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் செயற்பட்டு கொண்டிருக்கின்றது.

கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்.இது சட்டத்தை மீறிய செயற்பாடாகும்.

அமைச்சரவைத் தீர்மானத்தை மீறி எவ்வாறு கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் செயற்பட முடியும்.

இதை நாம் அனுமதிப்போமாயின் தமிழ்த் தேச வரைபடத்திலிருந்து கல்முனை வடக்கு அகற்றப்படும்.

தமிழர் தாயகத்திலிருந்து கல்முனை வடக்கு பறிபோகப் போகின்றது. இது தான் அவர்களது சூழ்ச்சி. இது தான் அவர்களது நிகழ்ச்சி நிரல்.

இந்த சதிக்கு எதிராகத் தான் இந்த மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். 14 நாட்களாக இந்த மக்கள் போராடி வருகின்றார்கள். இவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை மக்களோடு சேர்ந்து நாமும் போராடுவோம்.

இது வெறுமனே கல்மனை வடக்கின் பிரச்சினை மாத்திரம் அல்ல. தமிழ்த் தேசத்தின் பிரச்சினை. கல்முனை வடக்குக்கு நீதி கேட்டு தமிழ்த் தேசம் திரள வேண்டும்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, மக்கள் திரண்டு போராட வேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேசமானது பறிபோகுமாயின் கிழக்கின் இருப்பு கேள்விக்குறியாகி போய்விடும். அம்பாறை தமிழ்த் தேச வரைபடத்திலிருந்து நீக்கப்படும்.

ஆகவே, மக்கள் சிந்திக்க வேண்டும். நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள். அந்த வழக்கினை மீறி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலகம் எனக் கூறி கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.

வழக்கினை தாக்கல் செய்தவர்கள்(தமிழ்ர் தேசியக் கூட்டமைப்பினர்) பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏன் திருகோணமலையில் நீதிமன்ற அவமதிப்பு என்று வழக்குத் தாக்கல் செய்த உங்களுக்கு இங்கு இவ்வாறு வழக்குத் தாக்கல் ஒன்றினை நீதிமன்ற அவமதிப்பு என்று மேற்கொள்ள முடியாதா? முடியும்.

ஆனால், எங்களது தலைவர்கள் கல்முனை வடக்கை சிங்கள பௌத்த பேரினவாதத்திடமும் சில அரசியல் தலைவர்களிடமும் விற்றுவிட்டார்கள்.

இதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. கல்முனை வடக்குக்கு நீதி கிடைக்கின்ற வரை நாங்கள் போராடுவோம்.

எங்களது கோரிக்கையான கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.

கல்முனை தெற்கு பிரதேச செயலாளரது அதிகாரங்கள் எமது பிரதேச செயலக எல்லையினுள் நிறுத்தப்பட வேண்டும்.நிறுத்தப்படுகின்ற வரை எமது போராட்டம் தொடரும்.கல்முனை வடக்கானது தமிழ்த் தேசத்தின் ஒரு பகுதி என்பதை மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

இங்கு இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு எதிராக தமிழ்த் தேசமாக நாங்கள் போராடுவோம். நீதி கிடைக்கின்ற வரை எமது குரல்கள் ஓயப்போவது கிடையாது என மேலும் குறிப்பிட்டார்.

மேலும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 14 ஆவது நாளாக இன்று கவனவீர்ப்புப் பேரணியுடள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது பல்வேறு வடிவங்களில் தீர்வினை வலியுறுத்தி பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக 14 ஆவது நாளாக இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து பேரணியாகப் போராட்டத்தை மக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச் செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம்   1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு  அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டினர்.

இருந்தபோதிலும் ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளையும் கண்டித்தும் திட்டமிடப்பட்டு  பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிர்வாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும்  அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வைத் தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, பல அரசியல்வாதிகள், பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் போராட்டத்தை மக்கள் கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(க)
 

138 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.