(புதியவன்)
பிரித்தானிய தலைமை அமைச்சர் ரிஷி சுனக் முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், கருத்துக் கணிப்புகளில் அவரது புகழ் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவர் தோல்வியடைய வாய்ப்புள்ளது என முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் ஆய்வாளர் ராப் ஃபோர்டின் கூற்றுப்படி, “ரிஷி சுனக் அரசியல் வேகத்தில் தடுக்க முடியாத மாற்றத்தை எதிர்கொண்டு உதவியற்றவராகத் தோன்றுவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை அமைச்சர் ரிஷி சுனக் இன்னும் தேர்தல் திகதியை அறிவிக்கவில்லை. எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பரில் அதனை திட்டமிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டோரிகளின் 14 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரித்தானியர்கள் விரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் 18 மாதங்களுக்கு முன்பு ரிஷி சுனக் தலைமை அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து எதுவும் செய்யவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகின்றது.
சமீபத்திய YouGov கருத்துக்கணிப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சி 155 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
இது கடந்த 2019 டிசம்பர் தேர்தலில் பெற்றுக்கொண்ட 365 இடங்களை விட கணிசமான வீழ்ச்சியென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியான லேபர் கட்சி 403 இடங்களைப் பெறும் என்றும் அதே கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக 2022 ஆம் ஆண்டு ரிஷி சுனக்தலைமை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவர் வழங்கிய பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் பாதிக்கு மேல் குறைந்திருந்தாலும் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே உள்ளது.
இந்நிலையிலேயே, சமீபத்திய கருத்துக்கணிப்பில் 58 வீத வாக்காளர்கள் கன்சர்வேடிவ்கள் மீது சாதகமற்ற பார்வையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.