(புதியவன்)
2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கைகளுக்காக விவசாயிகளுக்கு நிதி மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில், விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் கடந்த மார்ச் மாதம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது.
அதன்படி, இந்த ஆண்டு நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 15,000 படி நிதி மானியம் வழங்கப்படவுள்ளது. இந்தப் பணத்தை பசளை வாங்குவதற்காகவோ அல்லது நெல் சாகுபடிக்கு தேவையான வேறு ஏதேனும் நோக்கத்துக்காகவோ பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்தப் பணம் தமக்கு கிடைக்கவில்லையென சில விவசாய அமைப்புக்களிடமிருந்து வந்த அறிக்கைகள் தொடர்பாக, அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று காலை கமநல அபிவிருத்தி பணிமனையிடம் கேட்டறிந்தார்.
இதன் பிரகாரம், ஏற்கனவே சிறுபோக நெற்செயற்கை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போதும் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கை இந்த வாரத்துக்குள் நிறைவடையும் என கமநல பணிமனை அறிவித்துள்ளது.
சிறுபோகப் பருவத்தில் 6 இலட்சம் ஹெக்டரில் நெல் பயிரிடப்பட வேண்டும். ஆனால், தற்போதைய தகவலின்படி, 25,000 ஹெக்டரில் மட்டுமே நெல் சாகுபடி முடிந்துள்ளது.
நெல் சாகுபடிக்குப் பின்னரே பசளை இடப்படும். எனவே நெல் சாகுபடிக்குப் பின்னர் இந்த நிதி மானியத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்திலிருந்து விவசாயிகளின் வைப்பகக் கணக்கில் குறித்த பணம் வைப்பிலிடப்படும் என கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எம்.எச்.எல் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்காக ரூபாய் 7.5 பில்லியனை அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.