இலங்கையின் மறுப்பால் மாலைதீவை குறிவைக்கும் சீனா: 
இலங்கையின் மறுப்பால் மாலைதீவை குறிவைக்கும் சீனா: 

 (புதியவன்)

மாலைதீவில் சீன ஆராய்ச்சிக் கப்பல் இந்த வாரம் நங்கூரமிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தியா - சீனாவுக்கு இடையிலான பதற்றங்கள் மேலும் அதிகரித்துள்ளன.

"சியாங் யாங் ஹாங் 3" என்ற சீன கப்பலானது இந்த வாரம் பணியாளர்களின் சுழற்சிய மற்றும் எரிபொருள் நிரப்புதலுக்காக மாலைதீவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கப்பலின் மாலைதீவு விஜயம் குறித்து கவலை தெரிவித்துள்ள இந்தியா, இது சீனாவின் இராஜதந்திரம் என்றும், இது தரவுகளை சேகரிப்பதற்கான பீஜிங்கின் ஒரு பணியாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

இருப்பினும், இந்தியாவின் இந்த கவலைகள் வீணானது என சீன வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
சீனக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்கின்றன. கடல் பகுதியில் அதன் செயல்பாடுகள் முற்றிலும் சட்டபூர்வமானவை என்று முன்னாள் மக்கள் விடுதலை இராணுவ மூத்த கேர்னல் பிபிசி செய்திச் சேவையிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில நேரங்களில் கப்பல்களுக்கு எரிபொருள், உணவு மற்றும் தண்ணீர் போன்ற நிரப்புதல் தேவைப்படுகிறது. எனவே, அவை மூன்றாம் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தப்படுகின்றன, இது சாதாரணமானது.

எனவே, இந்திய அரசு அதைப் பற்றி அலட்டிக் கொள்ளக் கூடாது. இந்தியப் பெருங்கடல் இந்தியாவின் பெருங்கடல் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுடன் செல்வாக்குப் பெறுவதற்காகப் போட்டியிடும் சீனா, தங்கள் இமயமலை எல்லையில் நீண்டகாலமாக நிலவும் சர்ச்சைக்கு மத்தியில் தனது கப்பலை இந்தியக் கடல் பகுதிக்கு அருகில் அனுப்புவது இது முதல் முறையல்ல.

இரண்டு சீன கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் 2014 இல் கொழும்புக்கு ஒரு துறைமுக பயணத்தை மேற்கொண்டது.

மற்றும் இரண்டு சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் தென்னிந்தியாவின் முனைக்கு அருகில் உள்ள இலங்கைக்கு விஜயம் செய்து, இந்தியாவின் அதிருப்தியை சம்பாதித்தது.

இலங்கைக்கு பில்லியன் கணக்கான டொலர்களை கடனாக வழங்கிய சீனா தீவு நாட்டிற்குள் கணிசமான ஊடுருவலை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த வருகைகள் வந்துள்ளன.

சியாங் யாங் ஹாங் 3 என்ற ஆராய்ச்சிக் கப்பல், மாலத்தீவுக்குச் செல்வதற்கு முன், கொழும்பை சென்றடைய முதலில் திட்டமிட்டிருந்தது.

ஆனால் அந்த திட்டம் தற்சமயம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஆராய்ச்சிக் கப்பல்களை நிறுத்துவதற்கான இலங்கையின் முடிவு, சீனக் கப்பல்களின் இத்தகைய விஜயங்களுக்கு இந்தியாவின் கடும் ஆட்சேபனையின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது

இந்தியப் பெருங்கடலின் நடுவில் உள்ள மாலைத்தீவு, நீண்ட காலமாக இந்தியாவின் செல்வாக்கின் கீழ் உள்ளது. ஆனால், நவம்பரில் அரசதலைவராக பொறுப்பேற்ற மொஹமட் முய்சு சீனாவுக்கு ஆதரவானவராக காணப்படுகிறார்.

மற்றும் மாலைத்தீவின் வரலாற்றையும் அவர் மாற்றியமைக்க நினைக்கிறார்..

அவர் இந்திய அரசுக்கு எதிரான தனது பிரச்சாரத்தின் போது, தீவில் உள்ள சுமார் 80 இந்திய இராணுவ வீரர்களை டெல்லி திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியால் வழங்கப்பட்ட மூன்று உளவு மற்றும் மீட்பு வானுர்திகளை பராமரிக்கவும் இயக்கவும் படையினர் தீவு நாட்டில் இருப்பதாக இந்தியா கூறுகிறது.

நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மார்ச் 15 ஆம் திகதிக்குள் தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று மால‍ைத்தீவு அரசாங்கம் டெல்லிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மாலைத்தீவு வெளியுறவு அமைச்சு, "இராணுவ வீரர்களை மாற்றுவதற்கு" இந்தியா ஒப்புக்கொண்டதாகவும், முதல் குழு மார்ச் 10 ஆம் திகதிக்குள் நாட்டிலிருந்து வெளியேறும் என்றும் மீதமுள்ளவர்கள் மே இரண்டாவது வாரத்தில் வெளியேறுவார்கள் என்றும் கூறியது.
டிசம்பரில், முய்ஸுவின் நிர்வாகம், மாலைத்தீவு பிராந்தியக் கடற்பரப்பில் உள்ள கடற்பரப்பை வரைபடமாக்குவதற்கு முந்தைய அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட ஹைட்ரோகிராஃபிக் சர்வே ஒப்பந்தத்தை இந்தியாவுடன் புதுப்பிக்கப் போவதில்லை என்று அறிவித்தது.

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மாலைத்தீவில் உள்ள இந்திய தூதரகம்அண்மையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் மாலைதீவு அரசாங்கத்தின் மூத்த தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளாத அளவுக்கு இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளன.

இதற்கிடையில், கடந்த மாதம் பீஜிங்கிற்கு ஐந்து நாள் அரசுமுறை பயணமாக முய்சு சென்றபோது அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

அந்த பயணத்தின் பின்னர் சீன உயர்மட்ட அதிகாரிகள் மாலைதீவுக்கு விஜயம் செய்துள்ளனர். முய்ஸு பல சீன நிதியுதவி உள்கட்டமைப்பு திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

சீனா, அதன் வேகமாக விரிவடைந்து வரும் கடற்படைப் படைகளுடன், அத்தகைய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாலைதீவை அணுக விரும்புகிறது - இந்தியா இதனை தடுக்க விரும்புகிறது.


இது குறித்து பிபிசி செய்திச் சேவையிடம் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரண்,நிச்சயமாக, மாலைதீவு மிகவும் முக்கியமானது; இது இந்தியாவின் தெற்குப் பெருங்கடல் பகுதி.

இலங்கையில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாங்கள் தீவிரமாக கவனம் செலுத்தியதை போலவே, மாலைதீவில் என்ன நடக்கக்கூடும் என்பதில் நாங்கள் தீவிரமான முன்னெச்சரிக்கைகளுடன் உள்ளோம் என்றார்.

இந்தியாவுடனான பகமை குறித்து மாலைதீவு எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை
எனினும், இந்தியாவுடனான மாலைத்தீவின் விரோதப் போக்கு குறித்து அந் நாட்டு பிரதான எதிர்க்கட்சியான மாலைதீவு ஜனநாயகக் கட்சியும் எம் டி பி மற்றும் பிறரும் முய்ஸுவின் அரசாங்கத்தை கண்டித்துள்ளனர்.

அதேநேரம், இந்தியா போன்ற ஒரு மாபெரும் அண்டை நாட்டைப் பகைத்துக்கொள்வது நாட்டின் நலனுக்காக இல்லை என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரு சிறிய தீவு நாடாக, மாலைதீவு அதன் பெரும்பாலான உணவு, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு இந்தியாவையே சார்ந்துள்ளது. பல மாலைத்தீவியர்கள் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்கின்றனர்.

மாலைதீவு ஒரு சிறிய நாடு. ஆனால், ஆசிய வல்லரசு போட்டியின் நடுவில் நாம் சிக்கும் நிலைமை குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் மாலைத்தீவு அரசதலைவர் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு இந்த கருத்துக்கான கோறிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை.

சீனா அதிக மூலோபாய அபிலாஷைகளைக் கொண்டுள்ளது மற்றும் கடல்சார் ஆராய்ச்சிக்காக அல்லது அதன் வணிக நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அதிக கப்பல்களை அனுப்ப வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, டெல்லி அதன் கொல்லைப்புற பகுதியாக கருதும் மாலைதீவில் சீனாவின் வளர்ந்து வரும் உறுதியான செல்வாக்கை எவ்வாறு எதிர்கொள்வது என்பது சவாலாக இருக்கும்.(ப)

#uthayannews #newsupdate #todaybreaking #newsupdate #breaking

135 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.