புதியவன்
தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பத்து வயதுச் சிறுமிக்கு நீதி கோரி இன்று (19) காலை மன்னார் நீதிவான் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பு மக்கள் அமைதி வழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சிறுமியின் சாவுக்கு தாமதம் இன்றி நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரியும் சிறப்பு நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று இந்த வழக்கை விசாரிக்கக் கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 8.30 மணி தொடக்கம் 9.30 மணிவரை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கு, சிறப்பு விசாரணை காவல்துறை குழுவை நியமி, சிறுவர்களை உயிர் போல் காப்போம், இணையவழிப் பாலியல் துர்நடத்தைகளை நிறுத்துங்கள், எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் அதேநேரம் சிறுமியின் படத்தையும் ஏந்தியவாறு அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 48 மணி நேரம் காவல்துறை காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த மன்னார் நீதிமன்றம் சனிக்கிழமை (17) மதியம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் இன்று மீண்டும் குறித்த சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.