பெலாரஸில் உள்ள மருத்துவ பீடமொன்றில் கல்வி கற்கும் இலங்கை மருத்துவ மாணவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை (29) மாணவர் விடுதியில் உள்ள அறையொன்றில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெலாரஸ் நாட்டில் உள்ள மருத்துவ பீடமொன்றில் 4ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 24 வயதான மருத்துவ மாணவர், அந்த வருடத்தின் சிறந்த மருத்துவ மாணவராக தெரிவு செய்யப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டி பிரதேசத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியொன்றில் உயர்தர உயிரியலை பயின்ற இம்மாணவன் பெலாரஸ் நாட்டில் உள்ள மருத்துவ பீடத்தில் சேர்ந்துள்ளார்.
மாணவனின் தாயார் கடந்த சனிக்கிழமை தனது மகனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தபோது, அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என தாயார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தாயார், தனது மகனின் நண்பர்கள் பலரை அழைத்து, தனது மகனுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தும் அவர் பதிலளிக்காததால், அவரை பார்க்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
சக மருத்துவ மாணவர்கள் அவர் தூங்கிய அறைக்கு சென்று தேடினர். மருத்துவ மாணவனின் கழுத்தில் கட்டு ஒன்றும், அறையிலுள்ள உயரமான அலுமாரியில் மறுமூலையில் கட்டப்பட்ட கயிறும் காணப்பட்டது. இது குறித்து மருத்துவ மாணவர்கள் மாணவனின் தாயாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த மருத்துவ மாணவனின் மரணம் தற்கொலையா அல்லது வேறு காரணமா என்பது இதுவரையில் தெரியவரவில்லை என அந்த வட்டாரங்கள் மூலம் மேலும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இலங்கை மருத்துவ மாணவர் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி வரை தனது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியதாகவும் நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.