'இலங்கையின் முதல் மதம் இந்துமதமே. இந்து மதம் நிலைகொண்ட பின்னரே இலங்கைக்குள் பௌத்தம் கொண்டுவரப்பட்டது. இதுவே வரலாற்று உண்மை' என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித் துள்ளது கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு. 'வரலாற்றுக்கு முற்பட்ட இந்துமதம், எவ்வாறு பௌத்தத்தை ஆக்கிரமிக்க முடியும்?' என்றும் அந்த ஆணைக்குழு கேள்வியெழுப்பியுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆல யத்தில், சிவராத்திரி வழிபாடுகளின்போது பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் கண்டனங்கள் நாளுக்குநாள் குவிந்துவரும் நிலையில், கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு விடுத் துள்ள கண்டனக் குறிப்பு தனித்துவமானது என்ப துடன், 'குன்றின் மேல் ஏற்றிவைத்த தீபம் போன்று' அமையவேண்டியதாகவும் இருக்கின்றது. ஒரு கத்தோலிக்க அமைப்பான, கத்தோலிக்க மறைமா வட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் இந்த அறிக்கையானது, மத சகிப்புத்தன்மையென்பது எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இலங்கைத் தீவுக்குக் காலக்கண்ணாடியாகவும் பறைசாற்றி நிற்கின்றது.
முல்லைத்தீவு குருந்தூர்மலையாக இருக்கட்டும் அல்லது நெடுங்கேணி வெடுக்குநாறிமலையாக இருக்கட்டும் அல்லது கிழக்கிலுள்ள கேந்திரப்பகுதி களாக இருக்கட்டும், அங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாத அடக்குமுறைச் சிந்தனையின் பாற்பட்ட செயற்பாடுகள் வெறுமனே இந்து சம யத்துக்கு மட்டுமானவையல்ல. இந்த அடக்கு முறைகளை எதிர்கொள்ளும் மதமாக இந்து மதமும், இந்துக்களும் இருந்தாலும் இதை அனைத்துத் தமிழர்களுக்கும் எதிரான அடக்குமுறையாகவே கொள்ளவேண்டும். அது ஏன் என்பதைத்தான் வெளிப்படையாகவும் பட்டவர்த்தனமாகவும் பேசியிருக்கின்றது கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு.காணாமலாக்கப்பட் டவர்களின் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, பௌத்த பேரினவாதத்தின் நிலவிழுங்கல் செயற்பாடுகள் என அனைத்தும் எவ்வாறு தமிழர்களின் பொதுப்பிரச்சினையாக உள்ளனவோ அதுபோன்றுதான், இந்து வழிபாட்டுத்தலங்கள் மற்றும் இந்து ஆலயங்கள் மீதான ஆக்கிரமிப்பையும் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப வினையாற்றவேண்டும். ஆனால், இந்தப் புரிதல் தமிழர்தாயகத்தில் அநேகமானவர்களிடத்தில் இல்லை என்பதே கசப்பான உண்மை. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், மதத்தலங்கள் மீதான ஆக்கிரமிப்பை பொதுப்பிரச்சினையாக எடுத்துக்கொள்ளும் மனப் பாங்கு தமிழ் மக்களிடம் அருகியே வருகின்றது. உண்மையில் இந்த நிலை மாற்றப்படவேண்டும். எதிரி பிரித்தாளும் தந்திரத்தைக் கைக்கொள்வதற்கு 'பொதுப்பிரச்சினையாக'சில விடயங்களை தமிழர்கள் அணுகாதிருப்பதுதான் முதன்மைக் காரணம்.
இங்குள்ள தமிழ்த் தலைமைகளும் தத்தம் கட்சிக் கொடிகளைப் பலப்படுத்துவதில்தான் காலம் கடத்துகின்றனரே அன்றி, அதற்கு அப்பாற்பட்ட 'ஒன்றி ணைப்புச் செயற்பாடுகளையோ', செயற்றிட்டங்களையோ அவர்களும் முன்னெடுப்பதாயில்லை. இந்தச் சபிக்கப்பட்ட போக்குக்கு விரைவாக வைக்கப்படும் முற்றுப்புள்ளியே தமிழர்களின் நிலங்களை, வழிபாட்டுத் தலங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். இதேவேளை, கத்தோலிக்கத் தமிழர்களுக்கு எதிராக நடுவீதியில் நின்று கூப்பாடுபோடும் சிலர், சிங்கள - பெளத்த பேரினவாதத்தின் கொடூரத்தனங் களுக்கு எதிராகக் கைகட்டி, வாய்மூடி இருக்கும் இடம் தெரியாமல் காட்டும் விசுவாசத்தையும் தமிழர்கள் கவனித்து வைத்திருக்க வேண்டிய காலமிது.
(16.03.2024 - உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
n6riup
c0z5rh
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.