(புதியவன்)
பலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் போர் 6 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.
ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக கூறி இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
போரில் காஸா கடுமையாக சேதம் அடைந்துள்ளது. ஏராளமான கட்டிடங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன.
சமீபத்தில் காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபாவை சுற்றி கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது.
குண்டு வீச்சில் மருத்துவமனை கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக கூறி இஸ்ரேல் இராணுவம் சோதனை நடத்தியது. சில நாட்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு இருந்த இஸ்ரேல் இராணுவம் சமீபத்தில் அங்கிருந்து வெளியேறியது.
ஏற்கனவே அல்-ஷிபா மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதைய தாக்குதல்களால் முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்நிலையில் அல்-ஷிபா மருத்துவமனை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம், எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, காஸாவின் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாக உள்ள அல்-ஷிபா மருத்துவமனை, சமீபத்திய தாக்குதலுக்கு பிறகு மனித கல்லறைகளுடன் காலியாக உள்ளது. அங்கு பலரது உடல்கள் கிடக்கின்றன.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. அல்லது சாம்பலாகிவிட்டன. குறுகிய காலத்தில் குறைந்தபட்ச செயல்பாட்டை மீட்டெடுப்பது கூட முடியாத செயலாக உள்ளது.
எஞ்சியிருக்கும் கட்டடங்கள் எதிர்கால பயன்பாட்டுக்கு பாதுகாப்பானதா? என்பதை ஆராய வேண்டியுள்ளது என்றார்.
அல்-ஷிபா மருத்துவமனையின் மருத்துவக் கருவிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.