எப்படி பரவியது என தெரியாதாம்!!
(மாதவன்)
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்ட நிலையில் துறைசார்ந்த மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது,
குறித்த ஆண்கள் பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்வி பயிலும் மாணவனுக்கு உடல் மெலிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இவ்வாறு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவனுக்கு காசநோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய சில மாணவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டனர். குறித்த மாணவர்களுக்கும் காசநோய் இருப்பது தெரியவந்தது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதுடன் தொடர்ந்தும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த நோய் பாடசாலையில் எவ்வாறு பரவியது என அவரிடம் வினவிய போது எவ்வாறு பரவியது என தங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்தார்.
குறித்த நோய் ஏனைய மாணவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு எவ்வாறான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றது என வினவிய போது அவர்களுக்கு 14 நாட்கள் வீட்டில் வைத்து சிகிச்சை வழங்கப்படுவதாகவும் பின்னர் முக கவசங்களை அணிந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
குறித்த மாணவர்களுக்கு காச நோயின் ஆரம்ப நிலை காணப்படுவதுடன் உரிய முறையில் சிகிச்சை பெற்றால் ஏனையவர்களுக்கு பரவமல் தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த கல்வி உயர் அதிகாரியை தொடர்பு கொண்ட போது குறித்த பாடசாலையில் குறித்த நோய் இனம் காணப்பட்டமையை உறுதி செய்தார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.