(இனிய பாரதி)
இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இலங்கை அரசு ஒரே ஒரு அறிக்கை விடுவதன் ஊடாகவே இப்பிரச்சினை தீர்க்கப்படலாம் என முன்னாள் அரசியல் கைதியும் சமூக செயற்பாட்டாளருமான வீரசிங்கம் சுலக்சன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய அரசியல் அரங்கில் தற்போது ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சர்வதேச உலகுக்கு உண்மையாக கொண்டு செல்லும் சக்தியாக ஊடகத்தினர் செயற்படுகின்றார்கள்.
அந்த வகையில்:-
ஈழ யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாகின்றது ஆனால் சிறைச்சாலைகளில் இருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சர்வதேசமோ ஐநா மனித உரிமை ஆணையகமோ காத்திரமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால் தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் செயற்பாடுகளையே இலங்கை அரசும் அதனோடு சேர்ந்து இயங்கும் ஒரு சில தமிழ் அரசியல் தலைமைகளும் முன்னெடுத்து செயல்படுத்துகின்றனர். காரணம் ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவாக பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் தாய் தமிழக உறவுகளுக்கும் ஈழத் தமிழ் உறவுகளுக்கும் இடையில் மோதலை தோற்றுவிப்பதில் இலங்கை அரசும் இந்திய புலனாய்வு பிரிவின் ரோ அமைப்பும் இணைந்து பல சதித் திட்டங்களை திரை மறைவில் செயல்படுத்துகின்றனர்.
அதன் ஒரு அங்கமே இலங்கை இந்திய மீனவர் விவகாரம்.. இறுதி யுத்த காலப்பகுதியில் ஈழத் தமிழ் உறவுகளுக்காக தங்களின் இன்னுயிர்களை அர்ப்பணித்த எமது தமிழக உறவுகளுக்கும் ஈழத் தமிழருக்கும் இடையில் மன கசப்பினை விதைக்கும் நோக்கில் சுலபமாக தீர்க்கப்பட வேண்டிய இந்திய இழுவைமடி மீனவர் பிரச்சனை ஆனது திட்டமிட்டு தமிழர் ஒன்று படுதலை தடுக்கும் நோக்கில் சிங்கள பேரினவாத அரசும் இந்திய புலனாய்வு பிரிவு ரோவும் இணைந்து செயல்படுகின்றன..
இது தமிழர்கள் விழிப்படைய வேண்டிய கட்டாய தருணம் இது..
எப்போதும் தமிழக அரசியல் அரங்கில் ஈழத் தமிழர் விவகாரம் கட்டாய பேசு பொருளாக உள்ளது.
தற்போது தமிழகத்தில் தேர்தல் இடம்பெறவிருக்கும் சந்தர்ப்பத்தில் ஈழத் தமிழர் விவகாரம் இம்முறை பாரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை. இந்திய இலங்கை மீனவர் விவகாரத்தை பூதாகரமாக்கி அதனை வைத்து இம்முறை தமிழக தேர்தல் அரசியல் களத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை ஓரங்கட்டி உள்ளார்கள்.
இதில் ஈழத் தமிழருக்காக பல்வேறுபட்ட வகையில் குரல் கொடுக்கும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கிலும், தமிழக தன்மான தமிழர்களின் எழுச்சியை தடுக்கும் நோக்கிலும், இந்திய புலனாய்வுபிரிவு ரோவும் இலங்கை பேரினவாதமும் இணைந்து பல சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்..
ஆனால் தமிழக தேர்தலில் கட்டாயம் தன்மானத் தமிழர்கள் நாம் தமிழர் கட்சியினை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஈழத் தமிழராகிய எமக்கு உண்டு..
இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இலங்கை அரசு ஒரே ஒரு அறிக்கை விடுவதன் ஊடாகவே இப்பிரச்சினை தீர்க்கப்படலாம்..
"மீனவர் விவகாரத்தில் இந்தியா எல்லை தாண்டும் மீனவர்களை கட்டுப்படுத்தாத சந்தர்ப்பத்தில் இலங்கை சீனா நாட்டின் கடற் படையினரின் உதவியை கோரி கரையோர பாதுகாப்பு ரோந்து நடவடிக்கை மூலம் தனது இறையாண்மையையும் , பாதுகாப்பினையும் பேணவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்ற ஒற்றை அறிக்கை மூலம் இலங்கை இந்திய மீனவர் விவகாரம் தீர்க்கப்பட.."
இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இலங்கையின் இறையாண்மையையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த இலங்கை அரசு பல்வேறு சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது..
ஆகையால் தற்போது ஏற்பட்டுள்ள இலங்கையின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் ராஜதந்திர ரீதியில் இவ்வாறான அறிக்கைகள் மூலம் இந்தியா ஊடாகவே இலங்கை இந்திய மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர முற்றுப்புள்ளியினை வைக்கலாம்..
பிராந்திய நலன் கருதி சீன கடற்படை ஆய்வு கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்காத இலங்கை அரசு நிச்சயம் ராஜதந்திரரீதியில் இந்தியாவின் மூலம் மீனவர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்..
ஆனால் இவற்றை இலங்கை பேரினவாதம் ஒருபோதும் செய்யாது இறுதி யுத்த காலப்பகுதியில் பல சர்வதேச நாடுகளின் உதவியுடன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தது.குறிப்பாக இந்தியாவிடம் கடற்படை கப்பல் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்கப்பல் மூலம் இலங்கை இந்தியா கரையோர பாதுகாப்பை மேற்கொள்ள முடியும். ஆனால் செங்கடல் கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு இங்கிருந்து கப்பலை அனுப்புகிறது ஆனால் இலங்கை பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியையும் கண்டுள்ளது அதை மீட்பதற்கு இங்கு வழியில்லை..
தமிழ்நாட்டை தன்மானத் தமிழரே ஆள வேண்டும் இம்முறை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் வெற்றியே அனைத்து உலகத் தமிழரின் வெற்றியை பறைசாற்றும் என நம்புகின்றோம்..
எம் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டம் பாயலாம், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமும் பாயலாம், மேலும் பொய்யான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் ஆனால் எம் உரிமைக்கான குரல் என்றும் ஓயாது ஒலிக்கும் என்றார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.