ஊர்காவற்றுறையில் உண்மையில் நடந்தது என்ன
ஊர்காவற்றுறையில் உண்மையில் நடந்தது என்ன

இனியபாரதி

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் உள்ள தமது வீட்டுக்கு விருந்துக்கு வந்தவர்கள் மீது ஊரிலுள்ள சிலர் மதுபோதையில் தாக்குதல் நடத்தி, அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி பொலிஸாரிடம் பிடித்துக்கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட வீட்டார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, தாக்குதலாளிகளுக்கு ஆதரவாகப் பொலிஸாரும் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனைப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான இளைஞனை தனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு கடந்த 04 ஆம் திகதி அழைத்துள்ளார். 

அதனையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன், தனது நண்பர்களான மேலும் மூவருடன் முச்சக்கரவண்டியில் ஊர்காவற்றுறைக்குச் சென்றுள்ளனர்.

தம்மை விருந்துக்கு அழைத்த இளைஞனின் வீட்டுக்கு முன்னால் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு, நால்வரும் வீட்டினுள் சென்று அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த வேளை, ஊரைச் சேர்ந்த சிலர் மதுபோதையில் அங்கு வந்து வெளியூரைச் சேர்ந்தவர்கள், யாரின் அனுமதி பெற்று ஊருக்குள் வந்தார்கள் என முரண்பட்டு, அவர்களின் முச்சக்கரவண்டி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். 

அவ்வேளை, இளைஞனை விருந்துக்கு அழைத்த இளைஞன் தாக்குதலாளிகளைத் தடுக்க முற்பட்ட வேளை இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் வீட்டின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு, யாழிலிருந்து சென்ற இளைஞர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு, அவர்களைப் பிடித்து ஊர்காவற்றுறை பொலிஸாரிடம், தம்மைத் தாக்க யாழிலிருந்து வந்ததாகக் கூறி பிடித்துக்கொடுத்துள்ளனர்.

பொலிஸார் அவர்களைக் கைது செய்த வேளை யாழிலிருந்து சென்ற இளைஞர்கள் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து இருந்தமையால், அவர்களைச் சட்ட மருத்து அதிகாரி முன்பாக முன்னிலைப்படுத்தி சிகிச்சை வழங்கியதுடன், மருத்துவ அறிக்கையையும் பெற்றிருந்தனர். 

பின்னர் பொலிஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை யாழைச் சேர்ந்த இளைஞர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் 04 ஆம் திகதி பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். 

அவ்வேளை, ஊரில் தமது வீட்டினை தாக்கி, தமது வீட்டுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களின் முச்சக்கரவண்டியை சேதமாக்கியமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர். 

குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், ஊரைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த நபர்கள் தங்களின் வீட்டிற்குள் புகுந்து தம்மைத் தாக்க வந்ததாக பரஸ்பர முறைப்பாடு வழங்கியுள்ளார். 

முதல் முறைப்பாட்டுக்கு விசாரணைகளை முன்னெடுக்காத பொலிஸார், இரண்டாவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து, முதல் நாள் பொலிஸ் பிணையில் விடுவித்த இளைஞர்களை பொலிஸ் நிலையம் அழைத்து மீளக் கைது செய்து நேற்றைய தினம் 06 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர். 

இதன்போது, கைது செய்யப்பட்ட நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை விண்ணப்பம் செய்ததையடுத்து மன்று அவர்களுக்குப் பிணை வழங்கியுள்ளது. 

அதேவேளை, முதலாவது முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. 

மண்டைதீவு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்று தமக்கு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் ஆதரவு உள்ளதாக பெயர் குறிப்பிட்டு கூறிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணைகளை எதிர்கொண்டு வரும்,  பொலிஸ் உத்தியோகத்தரே ஊர்காவற்றுறை சம்பவத்திலும் விசாரணை அதிகாரிகளில் ஒருவராக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (க)

106 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.