ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறி வருகின்றார். மக்களின் வாக்குகளைக் கவருவதற்கான அரசியல் பரப்புரைகளை அவரும் தொடக்கியிருக்கின்றார். இதன் ஒரு கட்டமாக, அரச தலைவர் தேர்தலை இலக்குவைத்து வீசப்பட்ட ஈஸ்டர் விவகாரத்தில் தானும் தன் பங்குங்குக்கு கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.
'புதிய அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு மாதங்களுக்குள் 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், 7 முதல் 9 தேசிய மற்றும் சர்வதேச அங்கத்தவர்களைக் கொண்ட, ஓர் ஆணைக்குழு நியமிக்கப்படும். இதன்மூலம் கடந்தகால மற்றும் தற்போதைய காலகட்டத்தின் முழுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும். எந்த வொரு நிறுவனத்திலும் எந்தவொரு நபரிடமும் எவ்வித தடையுமின்றி வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும். ஆணைக்குழுவை நிறுவிய 6 வாரங்களுக்குள் அதனுடன் இணைந்து பணியாற்ற ஸ்கொட்லண்யார்ட், எவ்.பி.ஐ. வெளிநாட்டுப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புச் சேவைகள், தேசிய புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு தரப் புகளைக் கொண்ட நிரந்தர விசாரணை அலுவலகம் நிறுவப்படும். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் உத்தரவுகளுக்குட்பட்டு இலங்கையின் சட்டங்களின் கீழ் குற்றப்பத்திரிகைகளைச் சமர்ப்பிப்பது அல்லது தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டமா அதி பருக்குக் கட்டாயமாக்கப்படும். 1948ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 7 (2) அல்லது பிரிவு 24 திருத்தப்படும். மேற்கண்ட குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது தீர்ப்பு வழங்க நிரந்தர உயர்நீதிமன்றம் நிறுவப்படவேண்டும். இதற்காக 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை கட்டமைப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமா அதிபரைச் சாராத அரச தரப்பு சட்டத்தரணி அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்ட வரைவு கொண்டு வரப்படும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கடந்த 2ஆம் திகதி உரையாற்றியிருந்தார்.
ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளான நீதியைப் பெற்றுக்கொடுத்தலுக்கு அவர் தனது செயலுரு எப்படி இருக்கப்போகின்றது என்பதைச் சொல்லியிருக்கின்றார். ஆட்சியைப் பிடித்து அதை நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே இவரது இந்தக் கூற்றை நம்பமுடியும். ஏனெனில் இலங்கையின் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதற்காக உறுதியளித்த எந்தவொரு விடயத்தையும் செய்ததேயில்லை. ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுப்பது நல்லது. அதற்காக அரச தலைவர் தேர்தலுக்கு முன்னரே தனது வரைப்படத்தை சஜித் வெளிப்படுத்தியமையும் சிறப்பானது.
ஆனால், ஈஸ்டர் தாக்குதல் நடப்பதற்குச் சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இறுதிப்போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் தங்களுக்கான நீதியை எதிர்பார்த்துக் காத்திருக் கின்றார்கள். அவர்கள் தங்களுக்கான நீதி, சர்வதேச விசார ணையூடாகவே நிலைநிறுத்தப்படும் என்று நம்பு கின்றார்கள். ஆனால், 2019ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகளை அதிகளவில் சுருட்டிய சஜித் பிரேமதாஸ அந்த மக்களின் நீதிக்கான கோரிக்கை தொடர்பில் வாயே திறக்கவில்லை.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விவகாரம் என்பது தெற்கின் அரசியலுடன் தொடர்புடையதாக்கப்பட்டுள்ளது. அதற்கு நீதியை நிலைநாட்டுவதன் ஊடாக தெற்கின் வாக்கு வங்கியைப் பலப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் வாய் திறந்தால் தெற்கின் வாக்குப்பலத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதால், சஜித்தும் அமைதிகாக்கின்றார். இப்படியானவர்களுக்கு வாக்களிக்குமாறு கோரும் தமிழ்த் தலைவர்களை, தமிழ்மக்கள் தங்கள் தலைவர் களாகத் தொடர்வதற்கு இனியும் அனுமதிக்கப் போகின்றார்களா...?
(06.04.2024-உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.