பொலிஸ் குழுக்கள் விசாரணை
(புதியவன்)
முன்னாள் பிரதி அமைச்சராக இருந்த பாலித தெவரப்பெருமவின் இறப்பு தொடர்பில் மத்துகம மற்றும் களுத்துறை ஆகிய இரண்டு சிறப்பு லனாய்வுப் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
பன்றிகளைக் கொல்வதற்காக இழுக்கப்பட்ட மின்சார கேபிளின் மூலம் அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கும் பொலிஸார் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் இந்த நிலத்தில் சட்டவிரோதமாக பன்றிகளை கொல்லும் வகையில் மின் கம்பிகள் பதிக்கப்பட்டிருந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த காணியை சுற்றி பாதுகாப்பு வேலி இல்லாததால் எவரும் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
விபத்தின் போது, மின்னலுடன் கூடிய காலநிலை நிலவியதால், பாலித தெவரப்பெரும மின்கம்பிகள் தொடர்பான ஏதேனும் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், உடல் உறுப்புகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது உடல் கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்தது.
உடல் கூற்றுப் பரிசோதனைக்கு பின் நேற்று மதியம் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகளும் இடம்பெற்றது.
பாலித தெவரப்பெருமவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தொடங்கொட, யடதொலவத்தை உள்ளிட்ட பிரதேசங்களில் வீதியின் இருபுறங்களிலும் வெள்ளைக் கொடிகள் மற்றும் இரங்கல் பதாதைகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மத்துகம, யடதொலவத்தையில் உள்ள இல்லத்துக்கு பெருமளவான மக்கள் வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.